2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பல முக்கியமான அறிவிப்புகள் இருந்தாலும், இந்திய டெக் உலகைப் புரட்டிப்போடும் மிக முக்கியமான அறிவிப்பாக இது விளங்குகிறது.
மத்திய அரசு கொடுத்த பல சலுகையின் காரணமாக இந்திய டெலிகாம் சந்தையில் தற்போது நிறுவனங்கள் போதுமான வர்த்தகம் மற்றும் வருமானத்துடன் உள்ளது. இதனால் கூடிய விரைவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடத்தப்படும் எனப் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
5ஜி சேவை
இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவை வழங்குவதற்காக 2022ல் கட்டாயம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் விடப்படும். இதன் மூலம் ஏலத்தில் கைப்பற்றும் அலைக்கற்றை மூலம் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை அளிக்க முடியும் என சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
5ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் மூலம் மத்திய அரசுக்கு அதிகளவிலான வருமானம் கிடைக்கும் நிலையில் மத்திய அரசு அடுத்த நிதியாண்டில் தான் ஏலம் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி சேவை அளிக்கத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎல்ஐ திட்டம்
மேலும் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் இந்தியாவில் 5ஜி சேவைக்கான கருவிகளை டிசைன் மற்றும் உற்பத்தி செய்யத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். இதன் மூலம் இந்தியக் கிராமங்கள் முதல் மலிவான விலையில் பிராண்ட்பேண்ட் மற்றும் மொபைல் சேவை அளிக்க முடியும்.
பாரத்நெட் திட்டம்
மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் சிறு கிராமம் மற்றும் நகரங்களுக்கு இண்டர்நெட் சேவையைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு 2022-23 ஆம் நிதியாண்டில் ஆப்டிக்கல் பைபர் அமைக்கும் திட்டத்திற்காக ஒப்பந்தம் வெளியிட உள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.