உலகமே 5G சேவையை எதிர்பாத்துக் காத்திருக்கிறது. தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த 5G சேவையில் முன்னிலையில் இருக்கின்றன.
இந்தியா, 5G டெக்னாலஜிக்கு ஒரு மிகப் பெரிய & முக்கியமான சந்தையாக இருக்கும் என ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி வெளிநாட்டுக் கம்பெனிகள் வரை நம்புகிறார்கள்.
அதற்கான முதல் முக்கிய படியாக, 5G சோதனைக்கு, மத்திய அரசின் டெலிகாம் துறை (Department of telecommunications - DoT) அனுமதி கொடுக்க இருக்கிறதாம்.
சீனாவுக்கு செக்
ஏற்கனவே பல்வேறு பஞ்சாயத்துக்களால், சீன புறக்கணிப்பு உணர்வு, இந்தியா முழுவதும் நிலவி வருகிறது. இந்திய அரசின் நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் தொடங்கி ரயில்வே ஒப்பந்தங்கள் வரை சீனாவுக்கு வழங்க முடியாது என்றார்கள். போதாக்குறைக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் உபகரணங்கள் மீது எல்லாம் கூடுதல் வரியை நீட்டித்து இருக்கிறார்கள்.
சீன செயலிகளுக்கு தடை
இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற் போல, டிக் டாக், ஷேர் இட், யூ சி ப்ரவுசர், யூ சி நியூஸ், கேம் ஸ்கேனர், வீ சாட் போன்ற 59 சீன அப்ளிகேஷன்களுக்கு, இந்தியா தடை விதித்தது இந்தியா. இது அமெரிக்காவே பாராட்டிய தடை. இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் சீனாவுக்கு அடி கொடுக்கும் இந்தியா, தற்போது 5G சோதனையிலும் செக் வைத்திருகிறது.
இந்தியா உடன் எல்லைப் பகுதி பகிரும் நாடுகள்
சில வாரங்களுக்கு முன்பே, இந்தியா உடன் எல்லைப் பகுதிகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இருக்கும் கம்பெனிகளுக்கு, அரசு கொள்முதல் & ஒப்பந்தங்கள் கொடுக்கப்படாது எனச் சொல்லி இருந்தது. அதில் 5ஜி சோதனையில் சீன கம்பெனிகள் அனுமதிக்கப்படாது எனவும் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீன கம்பெனிகளுக்கு இடம் இல்லை
இந்திய அரசின் டெலிகாம் துறையிடம், 5G சோதனை செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருக்கும் விண்ணப்பங்களில், சீன கம்பெனிகள் (Chinese Vendor) இல்லாமல் விண்ணப்பித்து இருக்கும் விண்ணப்பங்களை மட்டுமே, மத்திய அரசின் டெலிகாம் துறை, அனுமதிக்கப் போகிறார்களாம். அது என்ன "சீன கம்பெனிகள் இல்லாமல்" என்று ஒரு வார்த்தை.
5G-ல் சீன கம்பெனிகள்
உலகில் நோக்கியா, எரிக்ஸன், ஹுவாய் (Huawei), இசட் டி இ (ZTE) போன்ற சில கம்பெனிகள் மட்டுமே 5G டெக்னாலஜிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் நெட்வொர்க் வசதிகளை வைத்திருக்கிறார்கள். உலகில் பெரும்பாலான நாடுகள் 5G நெட்வொர்க்கை தங்கள் நாட்டில் கொண்டு வர இந்த கம்பெனிகளிடம் இருந்து தான் உபகரணங்கள் & சேவைகளைப் பெற வேண்டி இருக்கும்.
சொந்த தயாரிப்பு
அப்படி இல்லை என்றால், வேறு ஏதாவது கம்பெனிகள், தாங்களே ஆராய்ச்சி செய்து 5ஜி டெக்னாலஜியைக் கொண்டு வர வேண்டும். உதாரணமாக: இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தானே ஒரு 5ஜி டெக்னாலஜியை வைத்திருப்பதாக, முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் கம்பெனியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சொல்லி இருந்தார்.
அனுமதி இல்லை
எனவே இந்தியாவில் நோக்கியா, எரிக்ஸன் போன்ற கம்பெனிகளின் உதவியோடு, இந்தியாவில் 5ஜி சோதனை நடத்த அனுமதி கொடுக்க இருக்கிறது டெலிகாம் துறை. சீனாவின் ஹுவாய் மற்றும் இசட் டி இ போன்ற கம்பெனிகளோடு இணைந்து, இந்திய டெலிகாம் கம்பெனிகள் 5ஜி சோதனை நடத்த விண்ணப்பித்து இருக்கும் விண்ணப்பங்களை அனுமதிக்கப் போவதில்லை எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எப்படி அனுமதி
பார்தி ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ போன்ற கம்பெனிகள் சீனாவைச் சேராத நோக்கியா மற்றும் எரிக்ஸன் போன்ற கம்பெனிகளோடு இணைந்து 5ஜி சோதனையைச் செய்ய விண்ணப்பித்து இருக்கும் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க இருக்கிறார்களாம். ரிலையன்ஸ் ஜியோ தனியாக தன்னுடைய டெக்னாலஜியை வைத்து சோதித்து பார்க்கவும் தனியாக விண்ணப்பித்து இருக்கிறார்களாம். அதையும் டெலிகாம் துறை அனுமதிக்கப் போகிறார்களாம்.
எதிர்காலத்திலும் முடியாது
இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றைகளை, ஏலத்தில் எடுக்கும் எந்த ஒரு கம்பெனியும், எதிர்காலத்தில் கூட, இந்தியா உடன் எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் எந்த நாட்டு கம்பெனிகளோடும், டெலிகாம் உபகரணங்கள் & சேவைகளை வாங்க முடியாது எனவும் ஒரு விதி இருக்கிறதாம். ஆக இப்போது மட்டும் இல்லை, இனி எப்போதுமே சீன கம்பெனிகளுடன் இந்திய டெலிகாம் கம்பெனிகள் வியாபார ரீதியாக உறவு கொண்டாட முடியாது.
மாறி வரும் கம்பெனிகள்
ஆரம்பத்தில் Cellular Operators Association of India (COAI) அமைப்பு, சீன கம்பெனிகள் மீது விதிக்கப்படும் தடைகளை எதிர்த்தது. வியாபாரத்தை மற்ற பிரச்சனைகளோடு ஒப்பிட வேண்டாம் என்று எல்லாம் வாதிட்டார்கள். ஆனால் இப்போது அவர்களே சீன கம்பெனிகளுக்கு டாடா சொல்ல தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.
பார்தி ஏர்டெல் உதாரணம்
தமிழகத்தில், பார்தி ஏர்டெல் கம்பெனியின் 4ஜி சேவையை சீனாவின் ஹுவாய் கம்பெனி தான் நிர்வகித்து வருகிறதாம். இந்த முறை ஒப்பந்தம் நிறைவடைந்த பின், ஹுவாய் உடனான ஒப்பந்தை நீட்டிக்கப் போவதில்லை என்று சொல்லி இருக்கிறது ஏர்டெல். ஏர்டெல் & வொடாபோன் ஐடியாவின் 4ஜி நெட்வொர்க்குகள் பலதும் ஹுவாய் & இசட் டி இ கம்பெனி தான் கட்டமைத்துக் கொடுத்திருக்கிறார்களாம்.
சீனாவுக்கு செம அடி
சுமாராக 130 கோடி பேர் வாழும் நாட்டிலேயே, டெலிகாம் சார்ந்த ஒப்பந்தங்கள் எல்லாம் சீனாவுக்கு கிடைக்கவில்லை என்றால், வியாபார ரீதியாக, சீனாவுக்கு அடி கொஞ்சம் பலமாகத் தானே விழும். இதை எல்லாம் எப்படி சீனா சமாளித்து தன் பொருளாதாரத்தை வளர்க்கப் போகிறதோ ஜி ஜின்பிங்குக்குத் தான் வெளிச்சம்.