கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்த காரணத்தால் இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டு வேலைவாய்ப்புக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு ரிசர்வ் வங்கி 6 மாத கடன் சலுகை வழங்கியது ரிசர்வ் வங்கி.
இந்தக் கடன் சலுகை மூலம் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதை 6 மாதம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த 6 மாத காலத்திற்குக் கடனுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வழக்கு தொடரப்பட்ட நிலையில் இதற்கு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்-ல் பதில் அளித்துள்ளது.
6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
ரிசர்வ் வங்கியின் 6 மாத கடன் சலுகை காலத்தில் அனைத்து பிரிவுகளின் கடன் மற்றும் அட்வான்ஸ்களுக்கு 100 சதவீத வட்டியைத் தள்ளுபடி செய்தால் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருமானம் இந்திய வங்கிகளால் இழக்க நேரிடும். இது வங்கிகளுக்குப் பெரிய சுமையாக மாறிவிடும்
இந்திய வங்கிகள்
இந்த 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி இழப்பின் சுமையை வங்கிகள் ஏற்கும் பட்சத்தில் வங்கிகளின் பெரும் பகுதி சந்தை மதிப்பீடு குறையும், சில வங்கிகள் தொடர்ந்து இயங்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படும், இதேபோல் சில வங்கிகள் இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வருமா என்ற கேள்வியும் எழும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் விசாரணை
அசோக் பூஷன், ஆர் எஸ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பென்ச் இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. அரசு தரப்பில் துஷார் மேத்தா இந்த வழக்கின் விசாரணையில் மேலே குறிப்பிட்ட காரணங்களைத் தெரிவித்து, இதன் காரணமாகத் தான் கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யாமல் ஈஎம்ஐ செலுத்துவதை மட்டும் ஒத்திவைக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
துறை வாரியான விளக்கம்
மேலும் 3 நீதிபதிகள் அடங்கிய பென்ச் கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட கடன் சலுகை குறித்து ரியல் எஸ்டேட், மின்சாரம் என அனைத்துத் துறை சார்ந்த பாதிப்புகளையும், எதிர்கொண்ட சவால்களையும் கேட்டு வருகிறது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
தற்போது கணிக்கப்பட்டுள்ள 6 லட்சம் கோடி ரூபாய் நிதி பாதிப்பில், நாட்டின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கடனுக்கான 6 மாத சலுகை காலத்தின் வட்டியைத் தள்ளுபடி செய்தால் இவ்வங்கியின் சந்தை பாதிப்புப் பாதியாகக் குறைந்துவிடும் எனத் துஷார் மேத்தா உதாரணம் காட்டினார்.