சிறந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்து பெரிய கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புக்காக சேர்க்கின்றனர். ஆனால் அண்மைக்காலமாக இந்தியாவில் ஐஐடி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது பிரச்சினையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய 23 ஐஐடி- களில் நடப்பாண்டில் கல்வி பயின்ற 8000 மாணவர்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. 2023இல் இது 4,170 ஆகவும் 2022இல் 3,400 ஆகவும் இருந்தது. நடப்பாண்டில் இது கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதற்கு ஆறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை:

1. தேவைப்படும் திறன் இல்லாதது : தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தேவைகள் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து வருகின்றன. அதற்கு ஈடு செய்யக்கூடிய வகையில் நமது பாடத்திட்டங்கள் இல்லை என்பது ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது. நவீன யுகத்தில் பல்வேறு துறைகளிலும் நாளுக்கு நாள் புதுப்புது விஷயங்கள் அப்டேட் ஆகிக்கொண்டே வருகின்ற. பொறியியல் பாடங்களில் அதற்கு ஏற்ற பாடத்திட்டங்கள் இல்லாமல் இருப்பதால் நவீன திறன்கள் இல்லாமல் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர்.
2. கேம்பஸ் பிளேஸ்மெண்டுகளை சார்ந்திருப்பது: பாரம்பரியமாகவே ஐஐடி-களில் பயிலும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலமே உயர்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துவிடும் .ஆனால் தற்போது இந்தியாவில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது எனவே அதற்கேற்ற வகையில் போட்டியும் உயர்ந்துவிட்டது. இந்நிலையில் மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக கேம்பஸ் இன்டர்வியூக்களை மட்டுமே நம்பி இருப்பது பிரச்சனையின் ஒரு காரணம் என்கின்றனர் இந்த துறை சார்ந்த நிபுணர்கள்.
3. திறன் பற்றாக்குறை: தொழில்நுட்ப தேர்ச்சி அவசியம் என்றாலும் நிறுவனங்கள் மாணவர்களின் தகவல் தொடர்பு முறை, ஒரு குழுவாக இணைந்து செயல்படுவது, சிக்கல்களை தீர்க்கும் திறன் போன்றவற்றை எதிர்பார்க்கின்றன. பல்வேறு மாணவர்களுக்கு இத்தகைய திறன்கள் இல்லாததால் அது வேலை வாய்ப்பு கிடைப்பதில் இடையூறை ஏற்படுத்துகிறது.
4. பொருளாதார வீழ்ச்சி மற்றும் தொழில்துறை போக்கு: பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் தொழில்துறை தேவைகளில் ஏற்படும் மாற்றங்கள், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்துவிடுகின்றன. ஒரு காலத்தில் ஐடி மற்றும் இ-காமர்ஸ் போன்ற துறைகள் தான் பெரும்பாலானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய துறைகளாக இருந்தன அவை மந்த நிலையை அடைந்ததால் பலருக்கும் வேலை கிடைப்பது குறைந்துவிட்டது.
5. அதிக எதிர்பார்ப்பு: பொறியியல் சார்ந்த துறை ஒரு லாபகரமான தொழில் பாதை என்ற கருத்து பல்வேறு பட்டதாரிகள் இடையே ஊதிய எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. எனவே அதிகபட்ச ஊதியத்தில் தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாலும் பெரிய நிறுவனங்களில் வேலையை எதிர்பார்ப்பதாலும் இந்த சிக்கல் உருவாக்கிறது.
6. தொழில் ரீதியான அனுபவம்: பல்வேறு பொறியியல் பாடத்திட்டங்களும் மாணவர்களுக்கு உண்மையான தொழில் அனுபவத்தை வழங்க கூடியவையாக இல்லை. எனவே நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை பாடமாக மட்டுமே படித்துவிட்டு இவர்கள் வேலை தேடும் போது தான் பிரச்சனை வருகிறது.
தற்போது பொறியியல் படிக்கும் மாணவர்கள் தாங்கள் வேலைக்கு செல்ல போகும் துறையில் என்னென்ன அப்டேட்டுகள் இருக்கின்றன என்னென்ன திறன்கள் தேவைப்படுகின்றன என்பதை கல்லூரி இறுதி ஆண்டில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப திறன்களை வளர்த்துக் கொள்வது பெரிய நிறுவனங்களில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications