கொரோனா இந்திய மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு உள்ளது குறிப்பாக நடுத்தர மக்களின் வாழ்க்கை இந்த லாக்டவுன் காலத்தில் தலைகீழாக மாறியுள்ளது. இந்த லாக்டவுன் காலத்தில் வருமான இழப்பு, வரத்தக இழப்பு, வேலைவாய்ப்பு இழப்பு எனத் திரும்பும் பக்கம் எல்லாம் பிரச்சனைகளுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மறுமுனையில் இந்திய வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் வங்கிகளின் வராக்கடன் அளவு மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் முன்னணி ஆன்லைன் நிதி சேவை நிறுவனம் ஒன்று இந்திய மக்கள் எப்படி ஈஎம்ஐ செலுத்தத் திட்டமிட்டுள்ளனர் என்ற தலைப்பில் முக்கியமான ஆய்வை நடத்தியுள்ளது.
அப்பர் மிடில் கிளாஸ் மக்கள்
வங்கியில் கடன் பெற்றவர்கள் மத்தியில் மட்டுமே செய்யப்பட்ட ஆய்வு என்பதாலும், ஆன்லைன் ஆய்வு என்பதாலும் ஆய்வில் பங்குபெற்ற 80 சதவீதம் பேர் பெரு நகரங்களைச் சார்ந்தவர்களாகவும், பொருளாதார ரீதியில் அப்பர் மிடில் கிளாஸ் மக்களாக அதிகம் உள்ளனர்.
இந்திய பொருளாதாரச் சந்தையில் பாதுகாப்பான நிதி நிலைமை கொண்டு பிரிவாகப் பார்க்கப்படும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களின் பதில்களைப் பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது.
சம்பளம் மற்றும் வருமானம்
இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் 65 சதவீத மக்களின் வருமானம் அல்லது சம்பளம் இந்தக் கொரோனா காலத்தில் அதிகளவில் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
16 சதவீத மக்களின் வருமானம் அல்லது சம்பளத்திலஸ் 100 சதவீதமும் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
28 சதவீதம் பேர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடன் சலுகை
இதேபோல் இந்தக் கொரோனா காலத்தில் மக்களின் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு மத்திய அரசு கடன் சலுகையைக் கொடுத்தது. இந்தச் சலுகையைச் சுமார் 56 சதவீத மக்கள் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மறு சீரமைப்பு
இதுமட்டும் அல்லாமல் 55 சதவீத மக்கள், வங்கிகள் தற்போது கொடுத்து வரும் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
இந்தக் கடன் மறுசீரமைப்பு மூலம் மக்களின் கடன் சுமையில் சிறு அளவு குறையும் என்பதால் கடன் சலுகை பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் மறுசீரமைப்பு பெற முடிவு செய்துள்ளனர் என ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.
மக்கள்
இந்த ஆய்வில் சுமார் 8,616 பேர் கலந்துகொண்டுள்ளனர், ஆய்வில் பங்குபெற்றவர்கள் 24 முதல் 57 வயதுடையவர்கள், மேலும் இந்த ஆய்வு இந்தியாவில் சுமார் 37 நகரங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை
ஆய்வு செய்யப்பட்ட 37 நகரங்களில் மக்களின் பாதிப்பு குறைவாக இருக்கும் நகரங்களில் சென்னை முதல் இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிகிறது. சென்னையில் இருந்து இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் 48 சதவீதம் பேரின் வருமானம் அல்லது சம்பளத்தில் எவ்விதமான சரிவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் 9 சதவீத பேர் தான் 100 சதவீத வருமானத்தை இழந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
மோசமான பாதிப்பு
டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் இருக்கும் மக்கள் தான் அதிகளவிலான வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் எனப் பைசாபஜார் ஆய்வறிக்கை கூறுகிறது.