இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஒருபக்கம் கூட்டணி சேர்ந்து கட்டணத்தை உயர்த்தினாலும், மறுபுறம் வர்த்தக ரீதியில் பல சண்டைகளைப் போட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படி நீண்ட நாட்களாகப் பிரச்சனையாக இருந்து வந்த interconnect usage charges எனப்படும் ஐயூசி கட்டணத்திற்கு ஒரு முடிவு வந்துள்ளது.
டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அடுத்த ஒரு வருடத்திற்கு ஐயூசி கட்டணத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் ஏர்டெல், ஐடியா-வோடபோன் நிறுவனங்கள் கூடுதல் வருமானத்தைப் பெற முடியும். இதில் பாதிப்பு அடையப் போவது ஜியோ நிறுவனம் தான்.
ஐயூசி கட்டணம்
interconnect usage charges எனப்படும் ஐயூசி கட்டணம் என்பது வேற டெலிகாம் நெட்வொர்க்-இல் இருந்து வரும் அழைப்பை ஏற்று இணைக்கப்படுவதற்கான கட்டணம். அதாவது ஜியோ நம்பரில் இருந்து யாரேனும் ஏர்டெல் வாடிக்கையாளருக்குக் கால் செய்தால் அதற்கு ஜியோ நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இதுதான் ஐயூசி கட்டணம்.
போராட்டம்
இந்த ஐயூசி கட்டணத்தை ரத்துச் செய்ய வேண்டும் என இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள ஜியோ, டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய்-யிடம் போராடிக் கொண்டு இருந்த நிலையில். மறுபுறம் ஏர்டெல், ஐடியா வோடபோன் ஆகிய நிறுவனங்கள் வேண்டும் எனப் போராடியது.
காரணம் ஜியோவின் இலவச சேவையின் காரணம் ஏர்டெல், ஐடியா வோடபோன் தளத்தில் ஏக்கசக்கமான ஜியோ அழைப்புகள் வருகிறது. இதைப் பணமாக்க இரு நிறுவனங்களும் முடிவு செய்து தான் இந்த முடிவை ஏற்றது.
டிராய்
சில மாதங்களுக்கு முன்பு ஐயூசி கட்டணம் ரத்துச் செய்ய உள்ளதாக அறிவித்த டிராய், ஏர்டெல் மற்றும் ஐடியா - வோடபோன் எதிர்ப்பின் காரணமாக மீண்டும் பரிசீலனை செய்யத் துவங்கியது. இதன் படி ஜனவரி 1, 2019 முதல் ரத்துச் செய்யப்பட்ட வேண்டிய ஐயூசி கட்டண முறையை ஒரு வருடம் ஒத்திவைத்துள்ளது.
இதன் மூலம் அடுத்த ஜனவரி 1 அதாவது 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ஐயூசி கட்டணம் ரத்து செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு நிமிட அழைப்புக்கு 6 பைசா செலுத்த வேண்டும்.
ஜியோ
ஜூன் வரையிலான காலத்தில் ஜியோ-வின் மொத்த டிராப்பிக்-இல் 64 சதவீதம் அவுட்கோயிங் தான். இதனால் ஏர்டெல், ஐடியா-வோடபோன் ஆகியவை ஐயூசி கட்டணம் ரத்துச் செய்ய எதிர்ப்புத் தெரிவித்தது.
டிராய்-ன் இந்த அறிவிப்பின் மூலம் தொடர் நஷ்டத்தை எதிர்கொண்டு இருக்கும் ஏர்டெல், ஐடியா-வோடபோன் ஆகிய நிறுவனங்கள் கூடுதல் வருவாய் பெறும்.