மார்ச் 1, 2021 முதல் அமலுக்கு வந்துள்ள விதிகள் என்னென்ன? இது எப்படி சாமனியர்களின் வாழ்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
Recommended Video
குறிப்பாக அதிகரித்து வரும் எல்பிஜி விலை, எரிபொருள் விலை, எஸ்பிஐயின் கேஓய்சி விதிமுறைகள் உள்ளிட்ட பல மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
அது எந்த மாதிரியான மாற்றங்கள், யாருக்கு என்ன பயன்? பாதிப்பு? வாருங்கள் பார்க்கலாம்.
எல்பிஜி விலை
எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (oil marketing companies) சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளன. பிப்ரவரியில் கேஸ் சிலிண்டர் விலையானது 100 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று முதல் 25 ரூபாய் உயர்த்தியுள்ளன. சென்னையில் இன்று முதல் ஒரு சிலிண்டர் விலையானது 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே டெல்லியில் 769 ரூபாய்க்கும், இதே கொல்கத்தாவில் 845.50 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
எஸ்பிஐ –KYC அப்டேட்
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தங்களது கே ஒய் சி விவரங்களை, மார்ச் 1, 2021 முதல் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று முன்னதாக அறிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கினை எப்போதும் போல தொடர வேண்டுமெனில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்திருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் உடனடியாக சென்று அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஏடிஎம்மில் ரூ.2000 ரூபாய் அனுமதியில்லை
மார்ச் 1- லிருந்து இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை பெற வாடிக்கையாளார்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவ்வங்கி அறிவித்துள்ளது. எனினும் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்ற பின், குறைந்த மதிப்பிலான நோட்டுகளுக்காக வாடிக்கையாளர்கள் வங்கிகளை நாடுகின்றனர். இதை தடுக்கவே இவ்வங்கி இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐஎஃப்எஸ்சி கோடு சரிசெய்தல்
விஜயா வங்கி, தேனா வங்கிம் பேங்க் ஆப் பரோடா வங்கிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஐஎஃப்எஸ்சி கோடுகள் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளன. ஆக இனி பழைய ஐஎஃப்எஸ்சி கோடுகளை வைத்து பரிமாற்றம் செய்ய முடியாது. வாடிக்கையாளர்கள் புதிய எம்ஐசிஆர் கோடுகளுடன் கூடிய புதிய காசோலை புத்தகத்தினை மார்ச் 31, 2021 முதல் பெற்றுக் கொள்ளலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் IFSC
பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் IFSC கோடுகள் புதுபிக்கப்பட்டுள்ளன. பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை வங்கிகளான ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் பாங்கு ஆப் இந்தியா ஆகியவற்றின் ஐஎஃப்எஸ்சி கோடுகள் மற்றும் எம்ஐசிஆர் கோடுகளும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. எனினும் பழைய கோடுகள் மார்ச் 31 வரை அமலில் இருக்கும். இருப்பினும் வாடிக்கையாளர்கள் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க, விரைவில் புதியவற்றை பெறுமாறு வங்கி தனது வாடிக்கையாளர்களை வலியுறுத்தியுள்ளது.
இலவச பாஸ்டேக் இல்லை
இன்று முதல் சுங்க சாவடிகளில் இலவச பாஸ்டேக் வழங்கப்படாது என இந்திய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. புதியதாக பாஸ்டேக் பெற விரும்புவோர் 100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இன்று முதல் சில ஸ்பெஷல் ரயில்கள்
இன்று முதல் பல புதிய ரயில்கள் இயங்கத் தொடங்கும் என இந்திய ரயில்வே உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உத்திரபிரதேசம் மற்றும் பீகார் பயணிகள் அதிக பயன் பெறுவார்கள். எனினும் இது தவிர மேற்கு ரயில்வே 11 ஜோடி புதிய சிறப்பு ரயில்களை பல வழிகளில் இயக்க திட்டமிட்டுள்ளது. ஆக மொத்தத்தில் 22 புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்கள் மத்திய பிரதேசம், டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு இடையே இயங்கும். சில ரயில்களை அதனை தாண்டியும் இயங்க உள்ளன.