2014ஆம் ஆண்டு பல கோடி இந்தியர்களின் நம்பிக்கையின் ஒற்றை உருவமாகப் பிரதமர் பதவியேற்றிய நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வார் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர்.
இதுமட்டும் அல்லாமல் மோடிக்குச் சாதகமாக 1991க்குப் பின் இந்தியா இதுவரை கண்டிராத வகையில் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்து 7 வருடங்கள் முழுமையாக நிறைவு செய்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கு..?!
வாங்க ஒரு ரவுண்டு பார்த்திட்டு வருவோம்..!
இந்தியப் பொருளாதாரம் தொடர் சரிவு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருக்கும் 7 வருடத்தில் கடந்த 5 வருடமாக நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. டிசம்பர் 2016 முதல் ஜூன் 2020 வரையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்நிலையில் இன்று வெளியான 2020-21 நிதியாண்டின் ஜிடிபி அளவிடு -7.3 சதவீதமாக உள்ளது. இது கடந்த 40 வருட சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
தலைகீழாகக் கவிழ்ந்த இந்திய பொருளாதாரம்
2012-13ஆம் நிதியாண்டில் இருந்து நிலையான வளர்ச்சி அடைந்து வந்த இந்தியப் பொருளாதாரம், மோடி அரசின் மோசமான ஜிஎஸ்டி வரி அமைப்பு அமலாக்கம், மாபெரும் தோல்வியைச் சந்தித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் 8.2 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதாரம் -7.3 சதவீதமாக உள்ளது.
இந்தியாவின் தனிநபர் வருமானம்
இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் கடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தகம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் நிலையான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டின் தனிநபர் வருமானம் 2019-20ஆம் நிதியாண்டில் 2,064 டாலராக இருந்த நிலையில் கடந்த ஒரு வருடத்தில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து 2,227 டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவின் தனிநபர் வருமானம் 1,947.417 டாலராக உள்ளது.
இந்தியாவை விடப் பல மடங்கு சிறிய நாடு நம்மை முந்தியுள்ளது.
வேலைவாய்ப்பின்மை அளவீடு
இவை அனைத்திற்கும் மேலாக நாட்டின் வேலைவாய்ப்பின்மை கொரோனாவுக்கு முன்பே அதாவது 2017-18ஆம் நிதியாண்டு காலத்திலேயே 45 வருட உயர்வை அடைந்தது. தற்போது கொரோனா தொற்று மூலம் மேலும் மோசமடைந்துள்ளது.
சுதந்திர இந்தியா
இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து எப்போது இல்லாமல் சுமார் 90 லட்சம் பேர் வேலையை இழந்தனர், இதனால் நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு 7 சதவீதம் வரையில் உயர்ந்தது. இந்த அளவீடுகள் கொரோனா காலத்தில் 23.52 சதவீதம் வரையில் உயர்ந்தது.
கச்சா எண்ணெய் விலை
மோடி பிரதமர் ஆனா முதல் 3 வருடத்தில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது. 2011 முதல் 2014 வரையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டாலரில் இருந்து யாராலும் மறக்க முடியாது. இது 2015ல் 85 டாலராகவும் 2017, 2018ல் 50 டாலருக்கும் குறைவாகக் குறைந்தது.
பணவீக்கம் அளவீடு
2018 வரையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த காரணத்தால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது பெரிய விஷயமாக இல்லை, ஆனால் 2019ல் கொரோனா தொற்று, கச்சா எண்ணெய் சந்தையில் பிரச்சனைகள் வெடிக்கத் துவங்கியதும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது மோடி அரசு. தற்போது இந்தியப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய பிரச்சனைகளில் பணவீக்கம் மிக முக்கியமானது.
இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை
ஒரு அரசின் நிதியியல் வலிமையைக் கணிக்க மிகவும் முக்கியமான காரணி நிதி பற்றாக்குறை, இந்த அளவீட்டை வைத்துத் தான் ஒரு அரசு எந்த அளவிற்குக் கடன் வாங்க வேண்டும் என்பதையும், நிர்ணயம் செய்யப்பட்ட அளவிற்குள் நிதி பற்றாக்குறை அளவீட்டை வைப்பது மூலம் நாட்டின் நிதிநிலை மேம்படும்.
கொரோனாவுக்கு முன் நிதிப் பற்றாக்குறை
கொரோனாவுக்கு முன்பே நாட்டின் நிதிப் பற்றாக்குறை அரசு நிர்ணயம் செய்யப்பட்ட அளவீட்டை விடவும் தாண்டிய நிலையில், தற்போது 2020-21 நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை அளவு 9.3 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. பிப்ரவரி 2020ல் இது 3.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்த மத்திய நிதியமைச்சகத்திற்கு இது பெரும் தோல்வி.
ரூபாய் Vs டாலர் மதிப்பு
உலகிலேயே சிறந்த பிரதமர் எனப் போற்றப்படும் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றிய போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59 ரூபாய், வெறும் 7 வருடத்தில் இதன் அளவு 73 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
வறுமைக் கோடு-க்குக் கீழ்
இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு, வருமான இழப்பு ஆகியவற்றின் வாயிலாகத் தேசிய அளவிலான வறுமைக் கோட்டிற்குக் கீழ் சுமார் 23 கோடி மக்கள் தள்ளப்பட்டு உள்ளதாக CMIE-CPHS தரவுகள் கூறுகிறது.
கலால் வரி 5 மடங்கு வளர்ச்சி
பாஜக அரசு 2014ஆம் நிதியாண்டில் ஆட்சிக்கு வந்த முதல் பெட்ரோலியம் பொருட்கள் மீது இருந்த 4.9 சதவீத கலால் வரியை 2021ஆம் நிதியாண்டில் 25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் பாஜக அரசு கடந்த 7 வருடத்தில் அதாவது 2014 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பெட்ரோலியம் பொருட்கள் மீதான கலால் வரியை 5 மடங்கு அதிகரித்துள்ளது.
UPA அரசு தன் ஆட்சிக் காலத்திலிருந்த போது 2004ஆம் நிதியாண்டில் பெட்ரோலியம் பொருட்கள் மீதான கலால் வரியை 12.6 சதவீதத்திலிருந்து 2014ஆம் நிதியாண்டில் படிப்படியாக 4.9 சதவீதமாகக் குறைந்தது
இதுதான் முடிவுரை
மோடியின் கடந்த 7 வருடத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வலிமைப்படுத்தும் அனைத்து அதாவது "fundamentals of the economy" சற்று மோசமாகவே உள்ளது. இதைச் சரி செய்ய உடனடியாகச் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
உதய் கோட்டாக் யோசனை
கொரோனா பாதிப்பு மூலம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற இந்தியா அதிகளவிலான பணத்தை அச்சிட வேண்டும் எனக் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோட்டாக் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு என்ன செய்யும்..?!