உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில், கொரோனா வைரஸ் கடுமையாகப் பரவினால், அடுத்த சீனா போலக் கூட ஆக வாய்ப்பு இருக்கிறது.
எனவே கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதன் ஒரு பகுதி தான் இந்த ஷட் டவுன்.
ஷட் டவுன்
இந்த ஷட் டவுன் என்கிறார்களே அப்படி என்றால் என்ன..? சுருக்கமாக, அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்துவது தான் ஷட் டவுன். கொரோனா பரவாமல் இருக்க, மெட்ரோ ரயில் சேவைகள், சாதாரண ரயில் சேவைகள், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் என பல சேவைகளையும் நிறுத்தி இருக்கிறார்கள்.
எங்கு எல்லாம் ஷட் டவுன்
தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் ஷட் டவுன் செய்யப்படுமாம். அதே போல நம் அண்டை மாநிலமான கேரளாவில் 10 மாவட்டங்களும், கர்நாடகாவில் 9 மாவட்டங்களும், ஆந்திராவில் 3 மாவட்டங்களும், தெலுங்கானாவில் 5 மாவட்டங்களும் ஷட் டவுன் செய்ய இருக்கிறார்களாம்.
சேவை தொடரும்
சரக்கு ரயில் சேவைகள் வழக்கம் போல செயல்படுமாம். அதோடு மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள் வழக்கம் போலத் தொடருமாம். அப்படி எந்த எந்த சேவைகள் எல்லாம் தொடரும், உணவகங்களை நம்பி இருக்கு பேச்சுலர்களின் கதி என்ன..? என்பதை விரிவாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.
இதெல்லாம் இருக்கும்
மளிகை சாமான், காய்கறி, பழங்கள் பால், சமையல் எரிவாயு, டெலிகாம் சேவைகள், வீட்டுக்கு உணவை ஹோம் டெலிவரி செய்வது, இ காமர்ஸ் சேவைகள், வங்கி மற்றும் ஏடிஎம் சேவைகள், மருத்துவமனை மற்றும் மருந்துக் கடைகள், மிகக் குறைவான பொது போக்குவரத்து வசதிகள் வழக்கம் போல செயல்படும் என இந்தியா டுடேவில் சொல்லி இருக்கிறார்கள்.
பெங்களூரு
மீன், இறைச்சி, ஆட்டோ, டாக்ஸி, உணவகங்கள் உணவை பார்சல் செய்து கொடுப்பது, அஞ்சலக சேவைகள், மின்சார வாரியம், குடிநீர் மற்றும் நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் எல்லாம் வழக்கம் போல செயல்படும் எனச் சொல்லி இருக்கிறார் கர்நாடக மாநிலத்தின் உள் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை. அவ்வளவு ஏன், தொழிற்சாலைகள் கூட ஒரு நாள் விட்டு ஒரு நாள் செயல்பட அனுமதிக்க இருக்கிறார்களாம்.
பயம் வேண்டாம்
எனவே மக்களே, தேவை இல்லாமல் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். தேவை இல்லாமல் பயப்படவும் வேண்டாம். ஆனால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, விழிப்புணர்வோடு இருங்கள். சோஷியல் டிஸ்டன்சிங்கை (Social Distancing) கொஞ்சம் தீவிரமாக பின்பற்றுங்கள். அரசுக்கு உதவுவோம். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்போம்.