கொரோனா பல்வேறு நெருக்கடிகளையும், கஷ்டங்களையும் கொடுத்தாலும் அதே வேளையில் பல பாடங்களையும் கற்றுக்கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணத்தைத் தேவையற்ற விஷயத்திற்காக நாம் செலவு செய்கிறோம் என்பது நாம் அனைவருக்கும் இப்போது தெரிந்திருக்கும். இதேபோன்று தான் நாட்டின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான டிசிஎஸ் இக்கொரோனா கால வர்த்தக அனுபவத்தில் ஒரு முக்கியமான முடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவின் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் சுமார் 20 வருடம் செயல்படுத்தி வந்த நடைமுறையை முற்றிலுமாக மாற உள்ளது.
75% ஊழியர்களுக்கு Work From Home
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களின் ஒன்றான டிசிஎஸ் அடுத்த 4 வருடத்தில் அதாவது 2025ஆம் ஆண்டுக்குள் தற்போது வீட்டில் இருந்து வேலை (கொரோனா-க்கு முன்) செய்யும் 20 சதவீத ஊழியர்கள் அளவை 75 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் நிர்வாகம் 25/25 என்கிற புதிய திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அலுவலகத்தின் தேவை மற்றும் அதற்காகச் செலவிடப்படும் பணம் என அனைத்தும் பெருமளவில் குறைக்கப்படும்.
லாக்டவுன்
கொரோனா பாதிப்பின் காரணமாகத் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் 3.55 லட்சம் ஊழியர்களில் சுமார் 90 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். எவ்விதமான வர்த்தகப் பாதிப்போ அல்லது வேலை பாதிப்போ இல்லை. இந்நிலையில் லாக்டவுன் முடிந்த பின்பு டிசிஎஸ் நிறுவனத்தில் Secure Borderless Work Spaces (SBWS) எனத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
ராஜேஷ் கோபிநாத்
டிசிஎஸ் நிறுவன முதலீட்டில் உருவாக்கப்பட்ட Secure Borderless Work Spaces (SBWS) என்ற திட்டம் கடந்த சில வருடங்களாகவே இந்நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் தளத்தில் சுமார் 35,000 மீட்டிங், 4.06 லட்ச அழைப்புகள், 340 லட்ச மெசேஜ் டிசிஎஸ் ஊழியர்கள் மத்தியில் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இந்த லாக்டவுன் காலத்தில் இந்த SBWS தளம் வலிமை அடைந்துள்ளது என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் கோபிநாத் ஊழியர்களுக்கு அனுப்பிய கடித்ததில் தெரிவித்துள்ளார்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
வருவாய் மற்றும் வர்த்தக ரீதியில் டிசிஎஸ் தான் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனம் 75 சதவீ ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி கொடுத்தால் மற்ற நிறுவனங்களும் கட்டாயம் அதைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் இயங்கும் முறை முற்றிலும் மாறுபடும்.
பாதுகாப்புப் பிரச்சனை
இதுவரை இந்திய ஐடி நிறுவனத்தில் சராசரியாக 15 முதல் 20 ஊழியர்கள் தான் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தனர். அதிகளவிலான ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும் போது பல்வேறு பாதுகாப்பு பிரச்சனைகள் வரும் எனக் கருத்து நிலவுகிறது.
சைபர் செக்யூரிட்டி
இதனால் டிசிஎஸ் தற்போது சைபர் செக்யூரிட்டி, பிராஜெக்ட் மேனேஜ்மெண்ட், வொர்க் மானிடரிங் ஆகிய துறையில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி பிராஜெட்-இன் தரம் மற்றும் பாதுகாப்பில் எவ்விதமான குறைபாடும் இன்றிப் பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க உள்ளது டிசிஎஸ்.
நன்மைகள்
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த முடிவு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும், குறிப்பாகப் பெரு நகரங்களில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சனை மற்றும் அதைச் சார்ந்து உள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள், ஊரக வளர்ச்சிக்கு வித்திடுதல் ( ஊழியர்கள் சொந்த ஊரில் இருந்து பணியாற்றினால்) எனப் பல்வேறு வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என Florida International University பேராசிரியர் ரவி கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வருவாய் சேமிப்பு
டிசிஎஸ் இதனை நடைமுறைப்படுத்தும் போது இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், காக்னிசென்ட் போன்ற இதர நிறுவனங்களும் இதைக் கட்டாயம் செயல்படுத்தும். காரணம் இத்திட்டத்தின் மூலம் அதிகளவிலான வருவாய்ச் சேமிப்பது மட்டும் அல்லாமல் வீண் செலவுகளைக் குறைக்க முடியும்.