இன்று முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது எனலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17%ல் இருந்து 28% ஆக அதிகரிக்க கேபினட் ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசு இதுவரையில் இது குறித்த எந்த அறிவிப்பினையும் கொடுக்கவில்லை.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஜனவரி 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏவினை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரையும், ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலும், ஜனவரி 2021 முதல் ஜூன் 2021 வரையிலும் என்று மூன்று தவணை அகவிலைப்படியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பலத்த எதிர்பார்ப்பு
இதற்கிடையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த டிஏவினை வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. பொதுவாக இந்த டிஏ ஒவ்வொரு தவணைக்கும் 2% அதிகரித்து வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆக நிறுத்தப்பட்ட 3 தவணைகள் மற்றும் ஜூலை 2021ம் சேர்த்து, இறுதியாக வழங்கப்பட்ட 17%ல் இருந்து, 28% அதிகரிக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இது குறித்து கடந்த ஜுன் மாதம் நடந்த கூட்டத்திலும், எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
பல லட்சம் பேர் பயன்
இந்த நிலையில் இன்று கேபினட் இந்த அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பென்சன் வாங்கும் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் இது நல்ல விஷயம் என்றே கூறலாம்.
சம்பளம் அதிகரிக்கும்
இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதம் பெரியளவில் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். இந்த அகவிலைப்படி ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.