7வது சம்பள கமிஷன் கீழ் மத்திய அரசு பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்குப் பெரிய அளவில் பயன் அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளது என்றால் மிகையில்லை.
மத்திய அரசு அடுத்த சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான கிராக்கிப்படி அளவீட்டை அறிவிக்க உள்ள நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குடும்பப் பென்ஷன் அளவீடு
மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்குக் கிடைக்கும் பென்ஷனின் அதிகப்படியான அளவை மோடி தலைமையிலான மத்திய அரசு உயர்ந்துள்ளது. இப்புதிய அறிவிப்பின் படி மாதம் 45,000 ரூபாயாக இருந்த குடும்பப் பென்ஷன் அளவீடு சுமார் 80,000 ரூபாய் வரையில் அதிகரித்து 1,25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
45,000 ரூபாய் உச்சவரம்பு
இதன் மூலம் ஒரு குடும்பத்தில் மத்திய அரசுப் பணிகளில் இருந்தவர்கள் இதுநாள் வரையில் அதிகப்படியாக 45,000 ரூபாய் அளவிலான தொகையை மட்டுமே ஒவ்வொரு மாதமும் பெற்று வந்த நிலையில், ஓய்வூதியதாரர்களின் தகுதிப்படி முழுமையாக அல்லது அதிகப்படியான இனி மாதம் 1,25,000 ரூபாய் வரையிலான பென்ஷன்-ஐ பெற முடியும்.
மத்திய அரசு ஊழியர் குடும்பங்கள்
மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம், மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் குடும்பங்கள், மறைந்த மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்கள் அதிகளவிலான வருமானம் பெறுவதன் மூலம் பல லட்சம் குடும்பங்கள் பெரிய அளவிலான பலன் அடைய உள்ளது.
குடும்பப் பென்ஷன் முறை
ஒரு குடும்பத்தில் தந்தை மற்றும் தாய் மத்திய அரசு ஊழியர்களாக இருந்து இறந்த நிலையில் அவர்களின் மகன் அல்லது மகள் இருவருக்குமான பென்ஷன் தொகையைப் பெற முடியும், அதேபோல் மனைவி அல்லது கணவன் மத்திய அரசு பணியில் இருந்து இறந்த நிலையில் துணைவியார் பென்ஷன் பெறலாம்.
2.5 மடங்கு அதிகப் பென்ஷன்
இந்நிலையில் இந்த 2 பிரிவுகளின் கீழ் பென்ஷன் பெறுவோர் இதுநாள் வரையில் அதிகப்படியாக 45,000 ரூபாய் மட்டுமே பென்ஷன் பெற்று வந்த நிலையில், தற்போது இந்த அளவீடு 1,25,000 ரூபாய் வரை பெற முடியும். இது கிட்டதட்ட 2.5 மடங்கு அதிகம்.
6வது சம்பள கமிஷன்
6வது சம்பள கமிஷன் படி அதிகப்படியான சம்பளம் 90,000 ரூபாய் அளவில் இருந்த நிலையில், 50 சதவீத பிரிவில் 45,000 ரூபாயும், 30 சதவீத பிரிவில் 27,000 ரூபாயும் பென்ஷன் தொகையாக அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு குடும்பத்தில் 2 பேருக்கான பென்ஷன் பெறும் நிலையில் அதிகப்படியாக 45,000 ரூபாயாக மட்டுமே இருந்தது.
7வது சம்பள கமிஷன்
தற்போது 7வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்த நிலையில், அதிகப்படியான சம்பளம் மாதம் 2,50,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் சிசிஎஸ் பென்ஷன் சட்டம் 54 (11) பிரிவின் கீழ் 50 சதவீத பென்ஷன் பிரிவில் 1,25,000 ரூபாயும், 30 சதவீத பிரிவில் 75,000 ரூபாயும் அளிக்கப்படும். இதன் மூலம் 2 பேருக்கான பென்ஷன் கொண்ட குடும்பங்கள் அதிகப்படியாக 1,25,000 ரூபாய் அளவிலான பென்ஷனை பெறலாம்.