மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஏராளமான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டிலும் ஊழியர்களின் சம்பளம் ஊக்கத் தொகை வடிவில் தொடர்ந்து அதிகரித்து தான் வருகின்றது.
இந்த ஊக்கத் தொகையும் பல்வேறு வகையாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வீட்டு வாடகை அலவன்ஸ், பயணப்படி, கல்வி ஊக்கத் தொகை, மருத்துவ அலவன்ஸ் என பலவும் வழங்கப்படுகின்றன.
இது தவிர பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் என பலவற்றையும் ஊழியர்கள் பெற்று பலனடைந்து வருகின்றனர்.
உயர்கல்விக்கு ஊக்கத் தொகை
அந்த வகையில் தற்போது எந்த ஊக்கத் தொகையினை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால் யாருக்கெல்லாம் பயன்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஊழியர்கள் பணிபுரியும்போது உயர்கல்வி படித்தால், அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது உயர் பட்டப்படிப்பு முடித்த ஊழியர்களுக்கு அரசு ஊக்கத் தொகையை 5 மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வளவு அதிகரிப்பா?
இந்த ஊக்கத் தொகையானது Phd போன்ற உயர்கல்விகளுக்கு பொருந்தும். இந்த ஊக்கத் தொகை தான் 10,000 ரூபாயில் இருந்து 30,0000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்காக மத்திய அரசு 20 ஆண்டுகால விதிகளை பணியாளர் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.
தற்போதைய நிலவரம் என்ன?
தற்போதைய நிலவரப்படி ஊழியர்களுக்கு இந்த ஊக்கத் தொகை 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் தான் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திருத்தத்திற்கு பிறகு இனி ஊழியர்கள் அதிக ஊக்கத் தொகையினை பெறலாம். அதெல்லாம் சரி இதனால் யாருக்கு என்ன பயன் வாருங்கள் பார்க்கலாம்.
யாருக்கு என்ன பலன்?
- 3 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான டிப்ளமோ படிப்பினை முடித்தால் - ரூ.10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
- 3 ஆண்டுகளுக்கு மேலான பட்டம் அல்லது டிப்ளமோ படிப்புகளுக்கு - ரூ.15,000
- 1 வருடம் அல்லது குறைந்த முதுகலை பட்டப்படிப்புகளுக்கு அல்லது டிப்ளமோ படிப்புகளுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும்.
- பி.ஹெச் டி அல்லது அதற்கு இணையான படிப்புகளுக்கு 30,000 ரூபாய் ஊக்கத் தொகையாக கிடைக்கும்.
இதனை நினைவில் கொள்ளுங்கள்
- முறையான கல்வித் தகுதிக்கான பட்டங்கள் அல்லது இலக்கிய பாடங்களில் உயர் தகுதிகளைப் பெறுவதற்கு எந்த ஊக்கமும் இல்லை என பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மேலும் பணியாளர் பெற்ற பட்டமோ அல்லது டிப்ளமோ படிப்பானது ஊழியரின் பதவியுடன் தொடர்புடைய ஒன்றாக இருக்க வேண்டும். .
- அப்படி இல்லையெனில் அவர் பெறும் அடுத்த பணியுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பானது 2019ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.