மத்திய அரசு 7வது சம்பள கமிஷன் குறித்து வெளியிட்ட பல அறிவிப்புகள் இந்தியா முழுவதும் இருக்கும் லட்ச கணக்கான ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் அதிகரித்தது.
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் குழந்தைகளுக்கான கல்வி கொடுப்பனவு பெறுவதில் கூடப் பல தளர்வுகளை அறிவித்து மாதம் 4500 ரூபாய் வரையிலான கூடுதல் சம்பளம் பெறும் வகையில் அறிவிப்பு வெளியானது மறக்க முடியாது.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான CTG விதிகளில் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது.
CTG மானியம்
ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டுப் பரிமாற்ற மானியம் (CTG - Composite Transfer Grant அல்லது Composite Transfer and Packing Grant) விதியை மத்திய அரசு மாற்றியுள்ளது. இப்புதிய மாற்றத்தின் மூலம் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர் தங்களின் பணியின் கடைசி நிலையத்திலோ அல்லது தங்களுக்கு விருப்பமான இடத்தில் குடியேற வாய்ப்பு அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
மத்திய அரசு இதுவரை, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பணியாற்றும் கடைசிப் பணியிடத்தின் அருகிலேயே அல்லது கடைசிப் பணி இடத்தில் இருந்து 20 கி.மீக்கு மிகாமல் உள்ள பகுதிகளுக்குக் குடியேற விரும்பினால், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுக்கு CTG அனுமதிக்கப்படுகிறது.
20 கிலோ மீட்டர் நிபந்தனை ரத்து
தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ளது புதிய மாற்றத்தில் கடைசியாகப் பணியாற்றும் இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் என்ற நிபந்தனையை நீக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், மத்திய அரசு ஊழியர்கள் இந்த CTG மானியத்தைப் பெற, வசிப்பிடத்தின் உண்மையான மாற்றம் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.
80% அடிப்படை சம்பளம்
புதிய மாற்றியமைக்கப்பட்ட விதியின்படி, மத்திய அரசு ஊழியர்கள் முழு CTG-ஐ (அதாவது ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசியாகப் பெற்ற மாத அடிப்படை சம்பளத்தில் 80%) பெறலாம். மேலும் இது பணியின் கடைசி நிலையத்திலோ அல்லது ஓய்வுக்குப் பிந்தைய பணியின் கடைசி நிலையத்தைத் தவிர வேறு எந்த இடத்திலோ குடியேறலாம்.
அந்தமான் & நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு
மேலும் மத்திய அரசு ஊழியர்கள் அந்தமான் & நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளுக்குச் சென்று குடியேறினால், ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசியாகப் பெற்ற மாத அடிப்படை சம்பளத்தில் 100 சதவீத தொகையை CTG மானியமாக வழங்கப்படும்.
செலவினத் துறை
இப்புதிய மாற்றங்கள் அடங்கிய அரசு ஆணையை நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவினத் துறை, ஜனவரி 6, 2022 தேதியிட்ட அலுவலகக் குறிப்பில் தெரிவித்துள்ளது.