இந்தியாவில் சமீப காலமாக வர்த்தகத்தைத் துவங்கப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் கோடி கோடியாய் முதலீடு செய்து வரும் நிலையில், ஆட்டோமொபைல் துறையில் மட்டும் தொடர்ந்து நிறுவனங்கள் வெளியேறி வருகிறது.
கடந்த 5 வருடத்தில் பல முன்னணி மற்றும் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளது.
நிஸ்ஸான்
ஜப்பான் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான நிஸ்ஸானின் கிளை நிறுவனமான டட்சன் பிராண்டை இந்தியாவில் மூட உள்ளதாக அறிவித்துள்ளது. 9 வருடங்களுக்கு முன்பு மறு அறிமுகம் செய்யப்பட்ட நிஸ்ஸான் நிறுவனம் போதிய வர்த்தகத்தைப் பெற முடியாத நிலையில் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மூட முடிவு செய்துள்ளது. 2020ல் ரஷ்யா, இந்தோனேசியாவில் இருந்து டட்சன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலை சென்னை தொழிற்சாலையில் டட்சன் ரெடி கோ கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
போர்டு
இந்தியாவில் போதிய வர்த்தகத்தைப் பெற முடியாத நிலையிலும், அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் காரணத்தால் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருக்கும் இரு பெரிய தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்தது.
ஆனால் ஃபோர்டு எலக்ட்ரிக் வாகன பிரிவில் 50 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய அறிவித்த காரணத்தால் இந்தியாவை EV ஏற்றுமதி தளமாக மாற்ற முடிவு செய்துள்ளது ஃபோர்டு. மேலும் இதுவரை உறுதியான முடிவை எடுக்கவில்லை.
ஹார்லி டேவிட்சன்
பல கோடி ஆண்களின் கனவு வாகனமான ஹார்லி டேவிட்சன் மந்தமான வர்த்தகம், அதிகப்படியான வரி விதிப்பு ஆகியவற்றின் மூலம் இந்திய விற்பனை சந்தையில் இருந்து செப்டம்பர் 2020ல் மொத்தமாக மூட்டைக்கட்டிக் கொண்டு வெளியேறியது.
யுனைடெட் மோட்டார்ஸ்
அமெரிக்கப் பைக் நிறுவனமான யுனைடெட் மோட்டார்ஸ் (UM) மோசமான விற்பனை, குறைவான டிமாண்ட் ஆகியவற்றைக் காரணம் காட்டி அக்டோபர் 2019 ஆண்டு வெளியேறியது.
பியாட்
இத்தாலிய கார் தயாரிப்பு நிறுவனமான பியாட் இந்திய கார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல், வெறும் 7 வருடத்தில் வெளியேறியுள்ளது. மார்ச் 2019ல் கடினமான ABS விதிகள் மற்றும் எமிஷன் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேறியது.
கிளீவ்லேண்ட் மோட்டார்ஸ்
இந்த நிறுவனம் இந்தியாவிற்கு வந்தது பலருக்கும் தெரியாது, 2018 ஆட்டோ எக்ஸ்போ-வில் கிளீவ்லேண்ட் மோட்டார்ஸ் நிறுவனத்திற்குக் கிடைத்த வரவேற்பை பார்த்து இந்தியாவுக்கு வந்தது, ஆனால் 2019ல் தனது சக அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து வெளியேறியது.
Ssangyong மோட்டார்ஸ்
தென்கொரிய நிறுவனமான Ssangyong மோட்டார்ஸ் இந்தியாவில் பல கனவுகள் உடன் வந்தாலும், போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தால் பல கைகளுக்கு மாறி மொத்தமாக வெளியேறியது.
ஜெனரல் மோட்டார்ஸ்
இந்தியாவில் 20 வருடமாக இயங்கி வந்த அமெரிக்காவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் 2017 வெளியேறியது பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.