ஒரு புதிய ஊருக்கு குடிபெயர்கிறோம். அங்கு உங்களுக்கு தேவையான எலக்ட்ரீசியன், பிளம்பர் என ஒவ்வொன்றுக்கும் ஆள் தேடி அலைய வேண்டியிருக்கும். சில சமயங்களில் இதனால் பெரும் பிரச்சனையையே எதிர்கொண்டு இருக்கலாம். இது நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படும் அனுபவங்களே.
ஆனால் இதனையே எத்தனை பேர் வணிகமாக யோசித்திருக்கிறோம் எனில், அது கேள்விக்குறி தான்.
அப்படி யோசித்த ஒரு கேரள மாணவனின் அசத்தல் முயற்சியினை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
சவுதி அரேபியாவில் பள்ளி பருவம்
மத்திய கிழக்கு நாடுகளுக்கும், கேரளாவின் மலப்புரத்திற்கு இடையில் தனது குழந்தை பருவத்தினை கழித்த முகமது அப்துல் கஃபூர், தனது கிடைத்த வாய்ப்பை எப்படி சிக்சராக மாற்றினார்?
சவுதி அரேபியாவில் தனது 10 வகுப்பு வரையில் படித்த கஃபூர், அதன் பிறகு சொந்த ஊரான மலப்புரத்திருக்கு திரும்பியுள்ளார். அவரது தந்தை ஒரு எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். மலப்புரம் திரும்பியவர் சொந்தமாக ஒரு ஹார்டுவேர் வணிகத்தினையும் தொடங்கியுள்ளார்.
16 வயதில் முதல் அடி
கஃபூர் தனது தந்தையின் ஹார்டுவேர் வணிகத்தினை இளம்வயதில் இருந்தே பார்த்து வளர்ந்தவர். இது தான் தனக்கு இளம் வயதிலேயே வணிகம் செய்யும் எண்ணத்தினை உருவாக்கியது. இதுவே எனது படிக்கும் காலத்திலேயே வணிகம் செய்யவும் தூண்டியது. ஆரம்ப கட்டமாக எனது 16 வயதில் முதல் வணிகத்தினையே தொடங்கினேன். 2020ம் ஆண்டில் எனது கல்லூரியில், முதல் ஆண்டு படித்தபோது பிக்ஸ் இட்டினை (FIX it) தொடங்கினேன்.
ரூ.30 லட்சம் டர்ன் ஓவர்
இந்த ஸ்டார்ட் அப்- மூலம் அனைத்து வகையான வீட்டு சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம். இந்த வணிகம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. இது கேரளாவில் மலப்புரம், கோழிகோடும் பாலக்காடு உள்ளிட்ட 72 மாவட்டங்களில் விரிவாக்கம் அடைந்தது. தற்போது மாதம் 30 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறது.
கொரோனாவால் மாற்றம்
இப்படி இளம் வயதிலேயே இரு வணிகத்தினை தொடங்கிய இளம் தொழிலதிபரான கஃபூர், தனது கடின முயற்சியால் இன்று வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்து கொண்டுள்ளார்.
எல்லோரும் கொரோனா காலத்தில் வேலையிழந்து வீடுகளில் முடங்கிய நாட்களில், இந்த கொரோனா தான் தனது வாழ்வில் முக்கிய முனையமாக மாறியதாக கூறுகின்றார்.
முக்கிய காரணி கொரோனா தான்
கொரோனா லாக்டவுன் காலத்தில் தனது வீட்டில் நடந்த ஒரு முக்கிய சம்பவம், தனது தொழிலை மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கு முக்கிய காரணியாக அமைந்தது எனவும் கூறுகின்றார்.
கொரோனா காலத்தில் தனது தந்தை கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட சமயத்தில் வீட்டில் தண்ணீர் குழாய் உடைந்தது. அந்த சமயத்தில் அம்மா தனியாக இருந்ததால் அதனை சரி செய்ய முடியவில்லை. அதனை சரி செய்ய சரியான ஒரு பிளம்பரை கண்டுபிடிக்க அவதிப்பட்டுள்ளார். பலரையும் அந்த காலகட்டத்தில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சரியான தீர்வினை கண்டு பிடிக்க முடியவில்லை.
எம்சிஏ மாணவர்
இது தான் என்னை யோசிக்க வைத்து என்று கூறுகின்றார் 20 வயதான எம்சிஏ மாணவர். இந்த நிலையில் தான் அனைத்து சேவைகளையும் வழங்கும் ஒரு தளத்தினை உருவாக்கி, அதன் மூலம் வணிகத்தினை தொடங்கும் யோசனைக்கு வந்தேன். இது பிளம்பிங் வேலை மட்டும் அல்ல, பிளம்பிங், எலக்ட்ரிக் சேவைகள், தோட்ட வேலைகளுக்கும் தொழிலாளர்களை கண்டுபிடிப்பது கடினம்.
ஒரே இடத்தில் அனைத்து சேவை
இது அனைத்து சேவைகளையும் ஒரே தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்வதன் மூலம் சேவையை செய்ய முடியும் என நிலையை உருவாக்க நினைத்தேன். இதற்காக ஒரு சிம், ஒரு பேனர், திறமையான தொழிலாளர்களுடன் அதனை தொடங்கினேன். இதற்காக ஆரம்பத்தில் 5000 ரூபாயினை செலவிட்டேன். அதனையும் சிம், பேனர், தரவு சேகரிப்புக்காக செல்லும் செலவுகளுக்கு பயன்படுத்தினேன். அந்த காலகட்டத்தில் நானே நேரடியாக சென்று அனைத்தையும் செய்து கொண்டிருந்தேன்.
பிக்ஸ் இட் என்றால்?
முதல் 4 மாதங்கள் பல விசாரணைகள் மட்டுமே இருந்தது. பிக்ஸ் இட் என்றால் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில காலம் ஆகும் என நான் உறுதியாக நம்பினேன். ஏனெனில் இது முற்றிலும் புதிய ஒன்று. நான் எதிர்பார்த்ததை போலவே எனது வணிகம் மெதுவாக சூடுபிடிக்க தொடங்கியது. ஒரு சில மாதங்களுக்குள்ளேயே ஒரு வாரத்தில் 4ல் இருந்து 8 போன் கால்களை பெறத் தொடங்கினேன். விரைவிலேயே நகரத்தில் ஒரு அலுவலகத்தினை தொடங்கினேன்.
300 வகையான சேவைகள்
பிக்ஸ் இட் பிளம்பிங், எலக்ட்ரீசியன், தோட்டகலை சம்பந்தபட்ட 300 வகையான வேலைகளை கொண்டுள்ளது. எங்களது வாடிக்கையாளருக்கு என்ன வகையான தேவையோ அதனை கூறும் பட்சத்தில் அதற்கேற்ப ஆட்களை அனுப்புவோம். வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே அனுப்புவோம். அவர்களின் வருகைக்கான நேரத்தினையும் தெரியப்படுத்தி விடுவோம். இவை அனைத்துமே வெறும் 8 நிமிடங்களில் நடக்கும்.
கட்டணம் எப்படி?
இந்த வேலைக்கான கட்டணம் என்பது ஒரு மணி நேரத்துக்கு என்ற கணக்கில் வசூலிக்கப்படுகிறது. சிறிய வேலையாக இருந்தாலும் அதனை செய்கிறோம். முழு நாள் சம்பளம் கொடுத்து சிரமப்படுபவர்களுக்கும், இது பயனுள்ளதாக இருக்கும். இது தொழிலாளர்களுக்கும் உதவிகரமாக உள்ளது. அதோடு உள்ள அனைத்து தொழிலாளர்களும் தேவையான உரிமங்களும் இருக்கிறதா? என்பதை பார்த்தபிறகே அனுமதிக்கிறோம். அதன் மூலம் அவர்களின் இருப்பிடத்தையும் கண்கானிக்க முடியும்.
சவால்கள் என்னென்ன?
நான் சிறு வயதுடையவனாக இருப்பதால் என்னால் செய்ய முடியுமா? என்று பலரும் எண்ணுகிறார்கள். எனக்கு 20 வயது தான் என்பதால் யோசிக்கின்றனர். தற்போது பலவும் மாறிவிட்டன. ஆனால் இன்னும் சந்தேகத்துடன் தான் பார்க்கின்றனர். எனினும் நான் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எனது வணிகத்தினை தொடங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. வணிகத்தினை திறம்பட செய்து வருகின்றேன். தற்போது 3 மாவட்டங்களில் 71 பணியாளர்கள் உள்ளனர். மாதம் 30 லட்சம் டர்ன் ஓவர் ஆகிறது என்கிறார்.
கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிறந்த தொழிலதிபராக உருவெடுக்க ஆரம்பித்துள்ள இந்த இளைஞரின் உத்வேகம், பலருக்கும் நிச்சயம் ஒரு வேகம் தான்.