கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணி செய்தனர்.
அதன்பிறகு படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பிய போதிலும் அலுவலகம் சென்று பணிபுரிய பெரும்பாலான ஊழியர்கள் மறுத்து விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி இந்திய ஊழியர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அலுவலகத்தில் சென்று பணி புரிவதை சுமார் 80% ஊழியர்கள் விரும்புவதாகவும் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன.
சலிப்படைந்த வொர்க் ப்ரம் ஹோம்
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Ipsos நடத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்புவதில் மகிழ்ச்சியாக உள்ளனர். கணக்கெடுக்கப்பட்டவர்களில் 80% பேர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வொர்க் ப்ரம் ஹோம் பணி சலிப்படைந்துவிட்டதாகவும், அலுவலகங்களுக்கு சென்று வேலை செய்ய உற்சாகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆண்கள் - பெண்கள்
பெண் பணியாளர்களுடன் ஒப்பிடும்போது ஆண் பணியாளர்கள் அலுவலகம் செல்வதில் அதிக உற்சாகத்துடன் இருப்பதாக மிண்ட் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. வாக்களிக்கப்பட்ட ஆண்களில் 81% பேர் தாங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பியதில் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளனர். அதேபோல் பெண்கள் 77% பேர் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பியதில் மகிழ்ச்சி என கூறியுள்ளனர்.
மீண்டும் அலுவலகம்
இரண்டு ஆண்டுகள் கொரோனா வைரஸ் நாட்டு மக்களை ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது நாடு முழுவதும் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை எளிதாக்குதல், தடுப்பூசி போடுதல் மற்றும் கோவிட் நெறிமுறைகளின் தளர்வு ஆகியவை பணியாளர்கள் மீண்டும் அலுவலகம் செல்ல வழிவகுத்துள்ளது. 10ல் 8 பேர் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிலிருந்து வேலை செய்வதை விட அலுவலகத்திற்கு செல்ல தொடங்கிவிட்டதாக கூறியுள்ளனர்.
என்னென்ன நன்மைகள்
அலுவலகத்திற்குத் திரும்புவதால் வேலையை சிறப்பாக செய்ய முடிவதாகவும், வாழ்க்கை சமநிலை, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு வழி வகுப்பதாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் அலுவலகத்திற்கு செல்வது ஒரு வழக்கத்தை பராமரிக்க உதவுவதாகவும், குழு உறுப்பினர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்க வழிவகுப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆரோக்கியம்
Ipsos India பொது விவகாரங்கள் மற்றும் கார்ப்பரேட் நற்பெயரின் குழு சேவை வரித் தலைவர் பாரிஜாத் சக்ரவர்த்தி இதுகுறித்து கருத்து கூறும்போது, 'ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்வதால் உடல் ரீதியாக மிகுந்த ஆர்வத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக உணர்கிறார்கள் என்றும், மனரீதியாக அவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்து வருகிறது என்றும், குழுவுடன் வேலை செய்தால் வேலை மிக எளிதாக இருப்பதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் குழுக்களுடன் இணைந்து பணிபுரிவதால் உற்பத்தி திறன் அதிகரித்தல் உள்பட பல நன்மைகள் உள்ளது எனவும் அவர் கூறினார்.