பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்-ல் சாமானிய மக்களுக்கு அதிகம் பலன் அடையும் வகையில் 80சி பிரிவின் கீழ் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிச் சலுகையை 2 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசுக்கு 2020ல் அதிகளவிலான வரி வருமானம் பாதிப்பை அடைந்த நிலையில், வருமான வரி அளவீட்டில் எவ்விதமான குறைப்பையும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறது.
80சி பிரிவு வரிச் சலுகை
இதைத் தொடர்ந்து 80சி பிரிவின் கீழ் 2 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்படுவதாகவும், இந்தச் சலுகை அடுத்த 4 முதல் 5 வருடங்களுக்குத் தொடரும் வகையில் பட்ஜெட் ஆய்வு குழு தீர்மானம் எடுத்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகப் பிஸ்னஸ் டுடே பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
தனிநபர் வருமான வரி
இதன் மூலம் இந்த வருடம் பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரி விதிப்பில் முக்கியமான சலுகை கிடைக்க உள்ளது தெளிவாகியுள்ளது. ஆனால் மத்திய நிதியமைச்சர் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிடும் அறிவிப்பின் மூலமே இத்தளர்வுகள் உறுதியாகும்.
சேமிப்பு திட்ட முதலீடுகள்
இதேபோல் இன்னும் சில தனிநபர் வருமான வரிச் சலுகை பிரிவில் சேமிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த வரிச் சலுகை திட்டங்கள் சிலவற்றையும் பட்ஜெட் ஆய்வு குழு ஆலோசனை செய்துள்ளது.
குறிப்பாகச் சேமிப்புத் திட்டங்களில் மக்கள் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச் சலுகை அளிக்கும் திட்டத்தைப் பட்ஜெட் குழு ஆலோசனை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது
ரியல் எஸ்டேட் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ்
இதில் முக்கியமாக ரியல் எஸ்டேட் துறை சார்ந்த வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகைக்குக் கிடைக்கும் வரிச் சலுகையின் அளவீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் 80டி பிரிவின் கீழ் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் பிரிவில் கிடைக்கும் 25,000 ரூபாய்க்கான வரிச் சலுகை அளவீட்டையும் உயர்த்த ஆலோசனை நடந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரி தெரிவித்துள்ளதாகப் பிஸ்னஸ் டூடே தெரிவித்துள்ளது.