இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் என எங்கு பார்த்தாலும் 80s AI Trend தான் வைரலாக உள்ளது. அதாவது நாம் 1980களில் எப்படி இருந்திருப்போம் என்ற கற்பனைக்கு உயிரூட்டும் வகையில் இந்த டிரெண்ட் இந்தியா முழுவதும் ஆக்கிரமித்து இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களின் தற்போதைய புகைப்படங்களை ஏஐ உதவியுடன், 1980-களில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை போல மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதுதான் இந்த 80s டிரெண்ட். நீங்களும் கூட உங்கள் படத்தை சாட் ஜிபிடி அல்லது ஜெமினி ஏஐ-இல் அப்லோடு செய்து பின் வரும் பிராம்ப்டை கொடுத்தால் போதும் 80களில் நீங்கள் இப்படி தான் இருந்திருப்பீர்கள் என புகைப்படத்தை எடிட் செய்து காட்டும்.

இது தான் உங்களின் 1980களின் உலகத்திற்கு கொண்டு செல்லும் பிராம்ப்ட் "Using my uploaded photo, show me what I would have looked like around 1985. Preserve my identity, facial features, skin tone, age, and recognizable appearance. Reimagine my hair, clothing, accessories, and surroundings with bold, unmistakably mid-1980s styling - expressive silhouettes, statement accessories, layered details, distinctive colors, and textures. Make it feel like a genuine 1985 photograph with analog grain, faded color, direct flash, and subtle softness. Add a period-accurate 1980s red-orange date stamp in the lower corner. No modern objects or text."
இந்த டிரெண்ட் நாடுமுழுவதும் காட்டு தீ போல பரவி வருகிறது. இந்தியாவில் இது போல ஏஐ படங்கள் டிரெண்டாவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே கிப்ளி ஆர்ட், சேரி டிரெண்ட், ஃபிகரின் டிரெண்ட் எல்லாம் கடந்து தான் இப்போது 80களின் டிரெண்டுக்கு வந்து நிற்கிறோம். ஏஐ நிறுவனங்கள் நம் தரவுகளை பெறவும் ஏஐ மாடல்களுக்கு பயிற்சி தரவும் இத்தகைய டிரெண்ட்களை உருவாக்குகின்றன என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் இந்த வைரல் டிரெண்டுகளுக்கு பின்னாள் நம் சுற்றுசூழல் சார்ந்த மிகப்பெரிய ஒரு விஷயம் நடக்கிறது என்பதே உண்மை.
ஏஐ கருவிகளில் ஒரு புகைப்படம் உருவாக்க சில வினாடிகள் தான் தேவை ஆனால் இதன் பின் இருக்கும் சுற்றுச்சூழல் தாக்கம் மிகப்பெரியது. இவ்வாறு ஏஐ படங்களை உருவாக்க அதிகளவு ஆற்றல் தேவைப்படும் பிரம்மாண்ட டேட்டா சென்டர்கள் இயங்க வேண்டும். அண்மையில் கார்னகி மெல்லன் பல்கலைக்கழகம் மற்றும் ஹக்கிங் ஃபேஸ் நடத்திய ஆய்வின் படி ஒரே ஒரு ஏஐ புகைப்படத்தை உருவாக்க 0.29 கிலோவாட்-மணிநேரம் (kWh) வரை மின்சாரம் செலவாகிறது. ஒரு ஸ்மார்ட் போனை 50% சார்ஜ் செய்ய தேவைப்படும் மின்சாரம் இது. தனிநபருக்கு அது ஒரு புகைப்படம் தான் இதனால் என்ன ஆக போகிறது என தோன்றலாம் ஆனால் கோடிக்கணக்கான பயனர்கள் இதுபோன்ற பல புகைப்படங்களை மீண்டும் மீண்டும் உருவாக்கும்போது இதன் ஒட்டுமொத்த மின்சாரப் பயன்பாடு ஆபத்தான அளவை எட்டுகிறது.

அடுத்ததாக டேட்டா சென்டர்களில் உள்ள அதிவேக சர்வர்கள் அதிக லோடுடன் இயங்கும் போது இயந்திரங்கள் சூடாவதை தடுத்து குளிரூட்டும் அமைப்புகள் கோடிக்கணக்கிலான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உதாரணமாக, பிரபல ஜிபிடி-3 போன்ற ஏஐ மாடல்களுக்கு பயிற்சி அளிக்கவே சுமார் 700,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். அதாவது 320 பிஎம்டபிள்யூ கார்களை உருவாக்க தேவையான தண்ணீர் இது.
20 முதல் 50 பிராம்ப்ட்களை செயலாக்கம் செய்ய சாட் ஜிபிடி அரைலிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு யூனிட் மின்சார பயன்பாட்டிற்கும் டேட்டா செண்டர்கள் தங்கள் அமைப்புகளை குளிரூட்ட 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறதாம்.
ஏற்கனவே கிப்ளி ஆர்ட் புகைப்படங்கள் டிரெண்டான போதே சாட் ஜிபிடி தலைமை அதிகாரி சாம் ஆல்ட்மேன் மக்களே தயவு செய்து நிறுத்துங்கள் எங்கள் டீமிற்கும் உறக்கம் தேவைப்படுகிறது என கூறி இருந்தார். மேலும் தங்களின் டேட்டா செண்டர்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் பேசி இருந்தார்.
நாம் அனைவரும் ஒரு நாள் மகிழ்ச்சிக்காக ஏஐ-இல் புகைப்படங்களை எடிட் செய்து பகிர்கிறோம் ஆனால் மறைமுகமாக இது நிரந்தரமான பாதிப்புகளை நம் பூமிக்கு ஏற்படுத்துகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதிகப்படியான ஏஐ பயன்பாட்டால் விரைவில் தண்ணீர் பிரச்சினை, மின்சார பிரச்சினை உள்ளிட்டவற்றை இந்த உலகமும் மனித குலமும் எதிர்கொள்ள போகிறது என எச்சரிக்கின்றனர். இது போன்ற டிரண்டுகள் இன்று மறையும் நாளை புதிதாக தோன்றும் ஆனால் இதற்காக அழிக்கப்படும் இயற்கை வளம் மீண்டும் வராது என சுட்டிக்காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications


