மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை ஆகியவற்றை உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சம்பள கமிஷன் நாட்டின் விலைவாசி நிலவரங்களை ஆய்வு செய்து அரசு ஊழியர்களுக்கான சம்பள தொகையை நிர்ணயம் செய்யும். ஃபிட்மண்ட் ஃபேக்டர் அடிப்படையில் எத்தனை சம்பள உயர்வு தரலாம் என்ற பரிந்துரை வழங்கும்.
தற்போது 8ஆவது சம்பள கமிஷனிடம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் சார்பாக கோரிக்கை மனுக்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் (NC-JCM) ஊதிய உயர்வை தாண்டி சில முக்கியமான கோரிக்கைகளை 8ஆவது சம்பள கமிஷனிடம் முன் வைத்துள்ளன. இந்த பரிந்துரைகளை அரசு ஏற்கும் பட்சத்தில் அரசு ஊழியர்கள் சில முக்கியமான பண பலன்கள் கிடைக்கும்.

தற்போதைய காலகட்டத்தில் கார் என்பது ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல, அது ஒரு நடுத்தரக் குடும்பம் ஒட்டுமொத்தமாகப் பயணம் செய்யத் தேவையான அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது என கூறும் அரசு ஊழியர்கள் சங்கம் அரசு ஊழியர்கள் கார் வாங்குவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாத கடனாக வழங்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.
இதற்கு முன்பு வழங்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்ட 'பண்டிகை முன்பண' முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். ஊழியர்களின் ஒரு மாத அடிப்படைச் சம்பளத்திற்கு நிகரான தொகையை பண்டிகை முன்பணமாக வழங்க வேண்டும். இதனை ஊழியர்கள் 10 தவணைகளில் திரும்பச் செலுத்த வழிவகை செய்ய வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத கனமழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களால் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு உதவ முன்பு வழங்கப்பட்டு வந்த பேரிடர் முன்பணம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வட்டி இல்லாத இயற்கை பேரிடர் முன்பணத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதன்கீழ் ஒரு மாத அடிப்படைச் சம்பளத்தை முன்பணமாக வழங்கி, அதனை ஊழியர்களிடமிருந்து 24 தவணைகளில் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என வலியுறுத்தியுள்ளனர்.
இது தவிர, தற்போது நடைமுறையில் உள்ள கணினி வாங்குவதற்கான முன்பணம் மற்றும் வீடு கட்டுவதற்கான முன்பணம் ஆகியவற்றின் உச்ச வரம்பையும் கணிசமாக உயர்த்த வேண்டும் என ஊழியர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 8ஆவது சம்பள கமிஷன் இந்த பரிந்துரைகள் ஏற்று அரசிடம் சமர்ப்பித்து அரசும் இவற்றுக்கு அனுமதிக்கும் பட்சத்தில் 1.1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயனடைவார்கள். ஏற்கனவே சம்பள கமிஷன் தாமதமாக அமைக்கப்பட்டு சம்பள உயர்வு தள்ளி போகிறது என அதிருப்தியில் இருக்கும் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வை தாண்டி தங்களின் கோரிக்கைகளை ஆவது அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்கின்றனர்.


Click it and Unblock the Notifications

