இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்குவதற்காக 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. சம்பள கமிஷன் தன்னுடைய ஆய்வு பணிகளை நடத்தி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷனை நியமனம் செய்து தான் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வே வழங்கப்படுகிறது.
8ஆவது சம்பள கமிஷன் நாட்டின் நிதி நிலவரம் ,விலைவாசி ,அரசின் பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்து அதற்கு ஏற்ப மத்திய அரசுக்கு , அரசு ஊழியர்கள் சம்பளத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்பதற்கான பரிந்துரையை வழங்கும். மத்திய அரசும் தன்னுடைய நிதிக்கு உட்பட்டு அந்த பரிந்துரையை முழுமையாக ஏற்கலாம் அல்லது மாற்றம் செய்து அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கலாம்.

8ஆவது சம்பள கமிஷன் தன்னுடைய பணிகளை தொடங்கி இருக்கிறது அடுத்த 18 மாதங்களுக்குள் தன்னுடைய பரிந்துரையை மத்திய அரசுக்கு இது வழங்கிவிடும் . எனவே 2028 ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 2026 ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அரியர் பணமும் வழங்கப்பட்டு விடும்.
இந்த சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 8ஆவது சம்பள கமிஷனின் மூலம் மூன்று மடங்காக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சம்பள கமிஷனை பொறுத்தவரை ஃபிட்மன்ட் ஃபேக்டர் என்ற ஒரு காரணி அடிப்படையாகக் கொண்டுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையே மாற்றி அமைக்கும்.
அந்த வகையில் எட்டாவது சம்பள கமிஷன் 3.80 என்ற ஃபிட்மன்ட் ஃபேக்டரை கணக்கில் கொண்டு அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என பல்வேறு அரசு ஊழியர் சங்கம் சார்பாகவும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பணவீக்கம் ,விலைவாசி ,வாழ்க்கை செலவினம் மற்றும் நாட்டின் மொத்த விலை பணவீக்க தரவுகள், அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு, சம்பளத்திற்காக அரசுக்கு ஏற்படக்கூடிய செலவினம் ,தனியார் துறையில் கிடைக்கக்கூடிய சம்பளம் உள்ளிட்டவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் ஃபிட்மன்ட் ஃபேக்டர் வரையறுக்கப்படும்.
8ஆவது சம்பள கமிஷன் 3.80 என ஃபிட்மன்ட் ஃபேக்டர் கொண்டால் அரசு ஊழியர்கள் சம்பளம் எவ்வளவாக உயரும் என்பதை கணக்கிடலாம். தற்போது 18,000 ரூபாயை அடிப்படை குறைந்தபட்ச சம்பளமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை 3.80 என்ற ஃபிட்மன்ட் ஃபேக்டரில் வைத்து பார்த்தால் 68,400 ரூபாயை அடிப்படை சம்பளமாக பெறுவார். அதாவது அடிப்படை சம்பளமே 3 மடங்குக்கு மேல் உயர்கிறது. ஃபிட்மன்ட் ஃபேக்டர் அளவை அடிப்படை சம்பளத்துடன் பெருக்கினால் வருவதே புதிய சம்பளம்.
அடிப்படை சம்பளம் உயர்கிறது எனும் போது அதற்கு ஏற்ற வகையில் மற்ற அலொவென்ஸுகளும் உயரும். அகவிலைப்படி , வீட்டு வாடகை அலொவென்ஸ் ஆகிய அனைத்தும் அடிப்படை சம்பளத்தை வைத்தே கணக்கிடப்படுகின்றன என்பதால் அடிப்படை சம்பளம் உயர உயர இந்த அலொவென்ஸ் தொகையும் உயரும். இதன்படி 80,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கைக்கு வரும் குறைந்தபட்ச சம்பளம் இருக்க போகிறது.


Click it and Unblock the Notifications

