வாரத்திற்கு நான்கு நாள் வேலை ஏற்றுக்கொள்வதன் மூலம் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்து உலக நாடுகளுடன் இந்தியாவும் விவாதித்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்கள் ஐந்து நாள் வேலை முறை வேண்டும் எனப் போராட்டம் நடத்த உள்ளனர்.
ஜூலை 1 ஆம் தேதி புதிய தொழிலாளர் கொள்கை சட்டம் அமலாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பணி நேரம், பணி நாட்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.
இந்நிலையில் வங்கி ஊழியர்கள் போராட்டம் அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
5 நாள் வேலை
தற்போது வங்கிகள் மாதத்தில் 2 சனிக்கிழமை இயங்கி வரும் நிலையில் 5 நாள் வேலை வேண்டும் எனக் கோரிக்கையை வலியுறுத்தி ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்கள் ஜூன் 27 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
சனி, ஞாயிறு விடுமுறை
ஒவ்வொரு வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள வங்கி ஊழியர்கள், மொபைல் ஆப், நெட்பேங்கிங் சேவை போன்ற தொழில்நுட்பம் உதவிகள் இருக்கும் காரணத்தால் வங்கிகள் ஐந்து நாள் இயங்கினால் போதும் என விளக்கம் கொடுத்துள்ளனர்.
வங்கி ஊழியர்கள் கோரிக்கை
கடந்த ஏழு ஆண்டுகளாக அனைத்து வங்கி ஊழியர்கள் அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வாரத்தில் ஐந்து நாள் வேலை என்பது வங்கி ஊழியர்கள் தரப்பில் இருந்து வைக்கப்படும் ஒரு அடிப்படைக் கோரிக்கையாகும், மேலும் இது வங்கி ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) பொதுச் செயலாளர் C.H. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
ஜூன் 27 போராட்டம்
கிட்டத்தட்ட 9,00,000 வங்கி ஊழியர்கள் ஜூன் 27 அன்று வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (AIBEA) பொதுச் செயலாளர் C.H. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். 5 நாள் பணி நாள் மட்டும் அல்லாமல் இதர சில கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டு உள்ளது.
நான்கு நாள் வேலை
உலக நாடுகள் வாரத்திற்கு நான்கு நாள் வேலை என்ப முறைக்கு மாற வேண்டியதன் அவசியத்தை விவாதித்து வரும் வேளையில் இந்தியாவில் வங்கி ஊழியர்கள் இன்னும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்கிறார்கள் என்று தேசிய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு (NCBE) பொதுச் செயலாளர் எஸ்.கே. பந்த்லிஷ் கூறுகின்றனர்.
ஆர்பிஐ, எல்ஐசி
முதலீட்டு சந்தை ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குகிறது, ரிசர்வ் வங்கி ஐந்து நாட்கள் மட்டுமே இயங்குகிறது, LIC (லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா}) வாரத்தில் ஐந்து நாள் மட்டுமே இயங்கி வருகிறது. வங்கி ஊழியர்கள் மட்டும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்கிறார்கள் எனவும் NCBE பொதுச் செயலாளர் எஸ்.கே. பந்த்லிஷ் பேசியுள்ளார்.