பல கோடி இந்தியர்களின் கனவாக இருக்கும் அமெரிக்க வாழ்க்கைக்கு அந்நாட்டு அரசு தொடர்ந்து விசா கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் கனவை வெறும் கனவாகவே மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. கடவுள் ஒரு கதவை மூடினால் மறு கதவை திறப்பது போல் தற்போது இந்தியர்களுக்குப் பிரிட்டன் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது.
சமீபத்தில் கூடப் பிரிட்டன் அரசு தனது குடியுரிமை கொள்கையில் புதிய மாற்றங்களைச் செய்திருந்தது. இது இந்தியர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்த நிலையில் தற்போது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.
மாணவர்கள்
பிப்ரவரி 27ஆம் தேதி பிரிட்டன் குடியுரிமை புள்ளியியல் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதில் 2019ஆம் ஆண்டில் சுமார் 37,500 இந்திய மாணவர்களுக்கு Tier 4 விசா கொடுத்துள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 93 சதவீதம் அதிகமாகும்.
8 வருட உச்சம்
பிரிட்டன் குடியுரிமை அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த 8 வருடத்தில் பிரிட்டன் 2019ஆம் ஆண்டு தான் அதிகளவிலான விசாவை கொடுத்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை வளர்ச்சி 2016ஆம் முதலே துவங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதோடு பிரிட்டன் நாட்டில் தற்போது அதிகளவில் கல்விக்கான விசா கொடுப்பது இந்தியர்களுக்குத் தான்
ஊழியர்கள்
2019ஆம் ஆண்டில் திறமையான ஊழியர்களுக்கு வழங்கப்படும் Tier 2 விசா பிரிவில் சுமார் 57,000 பேருக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரிட்டன் கொடுத்த Tier 2 விசா எண்ணிக்கையில் 50 சதவீதம் இந்தியர்களுக்குக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
95 சதவீத வெற்றி
கடைசியாகச் சுற்றுலா செல்வதற்காகச் சுமார் 5,15,000 இந்தியர்களுக்குப் பிரிட்டன் விசா கொடுத்துள்ளது. இதேபோல் விசா விண்ணப்பித்த மொத்த இந்தியர்களில் சுமார் 92 சதவீதம் பேருக்கு விசா வெற்றிகரமாகப் பிரிட்டன் அரசு கொடுத்துள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடும் போதும் 5 சதவீதம் அதிகமாகும்.