இந்திய பொருளாதாரத்தின் பலமாக இருந்த இந்திய பொதுத்துறை வங்கிகள் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றால் மிகையில்லை. எல்லா வங்கிகளிலும் மோசடிகள் நடந்திருப்பது வெளி வந்த வண்ணம் உள்ளது, கிங்பிஷர் விஜய் மல்லையாவில் துவங்கி இன்று வரையில் மோசடிகளின் எண்ணிக்கையும் அளவும் குறைந்தபாடு இல்லை.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகைக்கு மிகப்பெரிய மோசடிகள் அரசு வங்கிகளில் நடந்துள்ளது.
18 பொதுத்துறை வங்கிகள்
இந்தியாவில் தனியார் வங்கிகள் அதிகமாக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்துவது அரசு ஏற்று நடத்தும் பொதுத்துறை வங்கிகள் தான். இப்படி இருக்கையில் நாட்டில் இருக்கும் 18 பொது துறை வங்கிகளில் சுமார் 5,743 வழக்குகளில் சுமார் 95,800 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் நடந்துள்ளது.
இவை அனைத்தும் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சர்
இதுக்குறித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சுமார் 5,743 வழக்குகளின் மூலம் சுமார் ரூ.95,800 கோடி மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதில் 1000 வழக்குகள் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடையவை எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கணக்குகள் முடக்கம்
வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே மத்திய நிதியமைச்சகம் விரைவாகச் செயல்பட்டு விசாரணையைத் துவங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடமாகவே மத்திய அரசும் பொதுத்துறை வங்கிகளில் மோசடிகளை தடுக்க கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகக் கடந்த 2 நிதியாண்டுகளில் மட்டும் இயங்காத நிறுவனங்களின் பெயரில் இருக்கும் 3,38,000 வங்கி கணக்குகளை முடக்கப்பட்டு உள்ளது.
முக்கிய வங்கிகள்
கடந்த 6 மாதத்தில் வெளிவான ரூ.95,800 கோடி ரூபாய் மதிப்புடைய வங்கி மோசடிகளில் அதிகம் பாதிக்கப்பட்டது மக்களால் அதிகம் நம்பப்படும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தான். எஸ்பிஐ வங்கி சுமார் 25,400 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது.
எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி 10,800 கோடி ரூபாயும், பாங்க் ஆஃப் பரோடா 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளது.