இன்னும் இந்த கொரோனா என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை. இனி சலூன் கடைகளுக்கு முடிவெட்டவோ, ஸ்பாக்களுக்கு சென்றாலோ கட்டாயம் ஆதார் கார்டு அவசியம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கடந்த செவ்வாய்கிழமையன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த அறிக்கையின் படி, கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த பல வாரங்களாக மூடிக் கிடந்த சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள், ஸ்பாக்களுக்கு செல்லும் போது கட்டாயம் ஆதார் கார்டினை கொண்டு செல்ல வேண்டும். அது மட்டும் அல்ல, அவ்வாறு வரும் வாடிக்கையாளர்களின் முகவரி, பெயர் மற்றும் மொபைல் எண், ஆதார் விவரம் போன்றவற்றினை குறித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் கடைகளில் அதிகப்படியான கூட்டத்தினை தவிர்க்க, முன்பதிவு அவசியம். ஆக இவ்வாறு முன்பதிவு அடிப்படையில் நேரம் ஒதுக்கி தான் அழகு நிலையங்கள் ஸ்பாக்கள் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் துண்டுகளை ஒரு முறை பயன்படுத்திய பின்னர், மற்றவர்களுக்கு பயன்படுத்தக் கூடாது. அதனை துவைத்து பின்னர் தான் மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும்.
மேலும் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் கைகளை துடைக்க நாப்கின் வைக்க வேண்டும். மேலும் அதனை பயன்படுத்திய பின்னர் அவற்றை பாதுகாப்பாக அகற்ற வேண்டும். அதோடு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், முட்வெட்ட துவங்கும் முன்னரும், அழகு பணி செய்யும் போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
மேலும் அழகு நிலைய உரிமையாளர்களும் பணியாளர்களும் கட்டாயம் முகக் கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். இருமல் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தங்கள் பணிகளை தொடரக்கூடாது. அதே போல வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிகுறி இருந்தாலும் அவர்களையும் அனுமதிக்க கூடாது.
கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். அறைகளில் குளிர் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இப்படி பல அதிரடியான கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கூட, அரசு பல வித கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. ஆக கட்டாயம் இந்த விதிகளை பின்பற்றுவோமே.