ஆதார் எண் இன்று அனைத்து அரசு சேவைகள், சலுகை திட்டங்கள் பெறுவதற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதில் ஏதேனும் தகவல்கள் சரியாக இல்லை என்றால் பல இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆதார் எண் தரவுகளை அப்டேட் செய்ய அரசு ஏற்கனவே பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
ஆனாலும் இந்தத் தேவையை இன்னும் எளிதாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் விதமாகப் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆதார் அப்டேட் சேவை
நாடு முழுவதும் அதாவது சிறு கிராமங்கள் முதல் பெரு நகரங்களின் அனைத்து பகுதிகளுக்கும் ஆதார் அப்டேட் சேவையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் விதமாக ஆதார் அமைப்பு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து ஆதார் அப்டேட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி
இதன் இணைப்பு மூலம் இனி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி அதிகாரி வீட்டிற்கே வந்து ஆதார் கார்ட்-ன் போன் நம்பர், முகவரி, பெயர் மாற்றம், பிறந்த நாள் மாற்றம் போன்ற அனைத்தையும் அப்டேட் செய்வார். இவ்வாறு வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்யும் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
போஸ்ட்மேன் வீட்டிற்கே வருவார்
இதுகுறித்து தொலைத்தொடர்பு அமைச்சகம் தனது டிவிட்டரில் கணக்கில், இனி போஸ்ட்மேன் வீட்டிற்கே அழைத்து ஆதார் கார்டு தரவுகளை உரிய ஆவணங்கள் மூலம் புதுப்பித்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது. இதேபோல் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆதார் கார்டு மொபைல் எண்-ஐ புதுப்பிக்கும் சேவையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
என்ன நன்மை?
முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள மொபைல் எண் அப்டேட் மூலம் ஒருவர் பொது விநியோக திட்ட சேவைகள், ஒரு தேசம் ஒரு ரேஷன் திட்டம், மொபைல் சிம் வாங்குவதற்கு KYC, ஆர்டிஓ, வருமான வரித்தளம், EPFO சேவைகள் எனப் பல சேவைகளைப் பெற முடியும்.
2 லட்சம் பேர்
மேலும் இந்தச் சேவையைத் தற்போது நாடு முழுவதும் இருக்கும் 650 இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கிளைகளிலும் பெற முடியும். மேலும் இத்திட்டத்திற்காகச் சுமார் 2 லட்சம் போஸ்ட்மேன் மற்றும் கிராமின் தக் சேவாக் அதிகாரிகள் மக்கள் வீட்டிற்குச் சென்று ஆதார் அட்டை தரவுகளைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.