ஜெய்ப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி, தொடர்ந்து இந்திய பொருளாதாரம் குறித்தும், பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்கள் பற்றியும் தொடர்ந்து வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறி வருபவர்.
இந்த நிலையில் வங்கித் துறையில் பெரும் அழுத்தம் நிலவி வருவதாகவும், ஆனால் அதற்கு பிணையம் வழங்கும் நிலையில் அரசும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
13-வது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் வழிகாட்டுதல்கள் குறித்து ஊடகங்களுடன் பேசிய அபிஜித் பேனர்ஜி, ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை, பொருளாதாரத்தில் நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது என்றும் அபிஜித் கூறியுள்ளார்.
அழுத்தத்தில் வங்கித் துறை
அதிலும் நாட்டில் தற்போது நிதித்துறை மிகப்பெரிய அழுத்த புள்ளியாகும். நிதித்துறை என்பது நாம் கவலைப்பட வேண்டிய ஒரு மிகப்பெரிய விஷயம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது இந்தியாவில் வங்கித்துறை மிக அழுத்தத்தில் காணப்படுகிறது. ஆனால் அதை பிணையம் எடுக்கும் நிலையில் இந்திய அரசாங்கமும் இல்லை. இது மிக கவலையளிக்கும் ஒரு விஷயம் என்றும் கூறியுள்ளார்.
நம்பிக்கை இழக்கும் மக்கள்
பொருளாதாரம் வளர்ச்சி வீழ்ச்சி காரணமாக, ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். ஆக இதுபோன்ற பல காரணிகள் பொருளாதாரம் மிக வேகமாக வளரப் போகிறது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் குறைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் செலவு செய்யவில்லை என்றும் அபிஜித் கூறியுள்ளார்.
மோசமாக பாதிக்கும்
Good Economics for Hard Times- இன் ஆசிரியர் இது குறித்து கூறுகையில், பொருளாதாரம் மந்தநிலை நகர்புறம் மற்றும் கிராமப்புற துறைகள் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதால், நாட்டில் வறுமை ஒழிப்பை இது மோசமாக பாதிக்கும். மேலும் நிலவி வரும் மந்தநிலையால் நகர்புறத்தில் குறைந்த வேலை வாய்ப்புகளையே இது உருவாக்குகிறது.
வளர்ச்சி எதிரொலிக்கும்
கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நகர்புறத்தினை நோக்கி வேலைக்காக நகர்கிறார்கள். இதன் மூலம் நகர்புறத்திலிருந்து பணத்தை கிராமப்புறங்களுக்கு திருப்பி அனுப்புகிறார்கள். சொல்லப்போனால் நகர்புறத்திலிருந்து வளர்ச்சியை பரப்புவதற்காக ஆதாரம் இது தான். நகர்ப்புறம் கிராமப்புறத்தினை மந்தப்படுத்தியவுடன் கட்டுமானப்பணிகளில் இருப்பவர்களுக்கு அதிகமான வேலைகள் இல்லை. இவை அனைத்தும் கிராமப்புற பொருளாதாரத்திலேயே பிரதிபலிக்கும் என்றும் இந்திய அமெரிக்கா பொருளாதார நிபுணர் எச்சரித்துள்ளார்..
அரசு இதை கவனிக்க வேண்டும்
நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளில் நம்பிக்கை சற்று வீழ்ச்சி கண்டு காணப்படுவதாகவும், இதனால் முதலீட்டாளர்களும் பதட்டமாக உள்ளனர். இது குறித்து அரசாங்கம் கவலைப்பட வேண்டும். மேலும் அரசாங்கம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது. உலகப் பொருளாதாரத்தில் அதிக முதலீடு மற்றும் அதிக ஈடுபாட்டை கொண்டிருக்க விரும்பினால் அரசு இதை கவனிக்க வேண்டும். மேலும் மக்களுக்கு உண்மையான தரவை வழங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications