ஜியோ, ஜியோ, ஜியோ எங்குத் திரும்பினாலும் ஜியோ பற்றிய செய்திகள். ஒருபக்கம் ஜியோமார்ட் அதிரடி விரிவாக்கம், வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் செய்யும் சேவை அறிமுகம், மறுபக்கம் தொடர்ந்து புதிய முதலீட்டாளர்கள் ஜியோ நிறுவனப் பங்குகளை வாங்கப் பேச்சுவார்த்தை என இந்தியா மொத்தமும் ஜியோவாகத் தான் உள்ளது.
ஏற்கனவே ஜியோ நிறுவனத்தில் பேஸ்புக், சில்வர் லேக் பார்ட்னர்ஸ், ஜெனரல் அட்லான்டிக், KKR & Co என முன்னணி முதலீட்டு மற்றும் டெக் நிறுவனங்கள் ஜியோ மற்றும் அதன் டிஜிட்டல் சேவையை மட்டும் நம்பி சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் 3 பெரிய நிறுவனங்கள் ஜியோ டிஜிட்டல் சேவை வர்த்தகத்தில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது.
Mubadala
அபுதாபி அரசு முதலீட்டு நிறுவனமான Mubadala ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் சவுதி அரேபிய முதலீட்டு நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாகச் செய்தி வெயிட்டு இருந்த நிலையில் அபுதாபி அரசு முதலீட்டு நிறுவனமான Mubadala முதலீடு செய்ய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நெருங்கியுள்ளது.
Mubadala இந்நிறுவனம் அபுதாபி-யின் 2வது மிகப்பெரிய முதலீட்டு நிறுவனம், இந்நிறுவனம் சுமார் 240 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறது.
டிவிட்டர்
சமுக வலைத்தளமான டிவிட்டர் ஏற்கனவே அதிகளவிலான நிதியை ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் நிலையில், டிவிட்டர் தற்போது டெலிகாம் சேவையைத் தாண்டி இசை, திரைப்படம் எனத் தனித்தனி ஆப் மூலம் மக்களுக்குப் பல்வேறு சேவைகளை அளிக்கும் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய டிவிட்டர் முடிவு செய்துள்ளது.
மைக்ரோசாப்ட்
ஏற்கனவே மைக்ரோசாப்ட் உடன் ரிலையன்ஸ் கிளவுட் சேவைக்காக இரு நிறுவனங்களும் கடந்த வரும் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் புதிதாக முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி மைக்ரோசாப்ட் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 2.5 சதவீத பங்குகளைக் கைப்பற்றி 2 பில்லியன் டாலக் முதலீடு செய்வதாகத் தெரிகிறது.
17 சதவீத பங்குகள்
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 5 முதலீட்டாளர்களுக்குச் சுமார் 17 சதவீத பங்குகளை விற்பனையைச் செய்துள்ள நிலையில், தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து உலகின் பெரும் முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம்.
மேலும் முகேஷ் அம்பானி குடும்பம் ஜியோ நிறுவனப் பங்கு இருப்பை 70 முதல் 80 வரையில் குறைத்து மீதமுள்ள 20 சதவீத பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.