இந்திய ஐடி துறை கொரோனா காலத்திலும் எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கும் காரணத்தால் கடந்த சில காலாண்டுகளாகக் கணிப்புகளை விடவும் அதிகமாக வருமானம் மற்றும் வர்த்தகத்தையும் பெற்று வருகிறது.
குறிப்பாகக் கொரோனா காலத்தில் உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்களில் டிஜிட்டல் சேவைக்கான தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதை ஈடு செய்யும் விதமாக இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றி வருகிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இதைக் கொண்டாடும் விதமாகக் கடந்த 2 மாதங்களாக நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்குப் போனஸ், அதிகப்படியான சம்பள உயர்வு ஆகியவற்றை அளித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அக்சென்சர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒன் டைம் போனஸ் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அக்சென்சர் நிறுவனம் அறிவிப்பு
ஐடி கன்சல்டிங் சேவை பிரிவில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் அக்சென்சர் நிறுவனம் தனது இந்திய ஊழியர்களுக்கும், வெளிநாட்டு ஊழியர்களுக்கும் ஒரு வார அடிப்படை சம்பளத்தைப் போனஸ் தொகையாக அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
போனஸ் தொகை
இந்தப் போனஸ் தொகை நிர்வாக இயக்குனர்கள் பதவி கீழ் இருக்கும் அனைத்தும் ஊழியர்களுக்கும் அளிக்க உள்ளதாக அக்சென்சர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அக்சென்சர் நிறுவனத்தின் 2வது காலாண்டு முடிவுகளுடன் வெளியிடப்பட்டதால் முதலீட்டாளர்களுடன் ஊழியர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
12.1 பில்லியன் டாலர் வருமானம்
2வது காலாண்டு முடிவில் அக்சென்சர் நிறுவனம் சுமார் 12.1 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது இது டாலர் மதிப்பில் கடந்த வருடத்தை விடவும் 8 சதவீதம் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் புதிதாக 16 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
ஊழியர்கள் மகிழ்ச்சி
இதன் மூலம் 2022ஆம் நிதியாண்டில் அக்சென்சர் நிறுவனம் 6.5 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரையிலான வருமான உயரத்தை அடையும் எனக் கணிப்புகளை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு வார அடிப்படை சம்பள போனஸ் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.