வழக்கமாக நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை சம்பள உயர்வு வழங்கப்படும். அடிப்படை சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை உயர்த்தி வழங்குவார்கள். அடுத்த மாதம் முதல் கூடுதல் சம்பளம் கைக்கு வர தொடங்கும். ஆனால் இந்த சம்பள உயர்வில் 50:50 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது உலகின் முன்னணி ஐடி நிறுவனமான Accenture.
தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக Accenture அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கை தான் டெக் ஊழியர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது. ஊதிய உயர்வு இனி இரண்டு பகுதிகளாக பிரித்து வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது சம்பள உயர்வு 50:50 என பிரிக்கப்படுகிறதாம்.

ஒரு ஊழியருக்கு அங்கீகரிக்கப்படும் மொத்த சம்பள உயர்வில் 50% தொகைஒ வழக்கமான அடிப்படை சம்பளத்துடன் நிரந்தரமாக சேர்க்கப்படும். இது ஒவ்வொரு மாத சம்பளத்தையும் உயர்த்தும். அதே வேளையில் மீதமுள்ள 50% தொகை ஜூன் மாத சம்பளத்துடன் ஒரே கட்டமாக (One-time payment) மொத்தப் பணமாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
உதாரணமாக உங்களுக்கு 3% சம்பள உயர்வு கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் 1.5% உங்கள் மாதாந்திர அடிப்படைச் சம்பளத்தில் (Base Pay) நிரந்தரமாக ஏறும். மீதமுள்ள 1.5% கணக்கிடப்பட்டு, ஜூன் மாதத்தில் ஒரே மொத்தத் தொகையாக (Lump sum) கையில் கொடுக்கப்படும்.
தற்போதைய உலகளாவிய பொருளாதார சூழ்நிலையை (கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் ஒட்டுமொத்த சம்பள செலவை (Payroll costs) சரியாக நிர்வகிப்பதற்கும் ஊழியர்களுக்கு கையில் உடனடியாக புழங்குவதற்குக் கூடுதல் ரொக்க பணம் கிடைக்க வேண்டும் என்பதற்கும் இந்த 50:50 முறையை கொண்டு வந்துள்ளதாக அக்செஞ்சர் விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகப்படியான ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளிக்க முடிந்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது.
பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு இதில் அடங்காது. அவர்களுக்கு வழக்கம்போல முழுத் தொகையும் அடிப்படைச் சம்பளத்திலேயே (Base Pay) சேர்க்கப்படும். இந்த ஜூன் மாத ஒற்றைத் தவணைத் தொகை (Lump-sum), டிசம்பர் மாதத்தில் வழங்கப்படும் வழக்கமான வருடாந்திர போனஸைப் பாதிக்காது; அது தனி, இது தனி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வின் ஒரு பகுதி மட்டுமே அவர்களின் மாதச் சம்பளத்தை உயர்த்தும், மறுபாதி ஜூன் மாதத்தில் ஒரே பெரிய தொகையாக வழங்கப்படும். இது இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. சிலர் மொத்த தொகைக்கு எப்படி வரி கணக்கிடப்படும் என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications

