தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது விஜயின் தவெக கட்சி. இதன் மூலம் தவெக தலைவரான விஜய் நாளைய தினம் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கலில் காலை 11.30 மணி அளவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நேரு உள் விளையாட்டரங்கில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி , எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி , சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் புதிதாக தேர்தல் களத்தில் இறங்கிய விஜயின் தமிழக வெற்றி கழகமும் போட்டி கண்டன.

தேர்தல் முடிவுகள் சுவாரசியமான முறையில் அமைந்திருந்தன. தேர்தலில் பதிவான வாக்குகள் மே நான்காம் தேதி எண்ணப்பட்ட நிலையில் 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. விஜய் தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என இரண்டு தொகுதிகளிலுமே வெற்றியை பதிவு செய்தார். திமுக படுதோல்வி அடைந்தது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய சொந்த தொகுதியான கொளத்தூரிலேயே தோற்கடிக்கப்பட்டார்.
இந்த சூழலில் தவெக தனி பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் ஆட்சி அமைப்பதற்கான முதல் அதிகாரம் தவெகவிற்கே கிடைத்திருக்கிறது. சட்டப்பேரவையில் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் தவெகவிற்கு 5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்திருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பகல் 3.30 மணி அளவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பினர் ஆளுநரை சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரி அதற்கான ஆவணங்களை வழங்கினார். அப்போது செங்கோட்டையன், ஆனந்த் , ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளை காலை 11:30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை பகல் 11:30 மணியளவில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது.
விஜய் தலைமையிலான ஆட்சியில் என் .ஆனந்த் , செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், திருப்பூர் சத்தியபாமா ,விஜயலட்சுமி ,அருண்ராஜ் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில், முதலில் விஜய் மேடைக்கு வந்து, 'சி.ஜோசப் விஜய் எனும் நான்...' என்று முதலமைச்சருக்கான பதவிப்பிரமாணத்தையும், ரகசியகாப்பு பிரமாணத்தையும் ஏற்றுக்கொள்வார். அதன்பின்னர் ஒவ்வொரு அமைச்சராக வந்து பதவி ஏற்றுக்கொள்வார்கள். அதைத்தொடர்ந்து முதலமைச்சராக விஜய் சென்னை கோட்டைக்கு சென்று, அவருக்கென்று தயார்படுத்தப்பட்டுள்ள அறைக்கு வந்து அரசு அலுவல்களை தொடங்குவார். அப்போது அவர் மகளிருக்கு மாதம் 2500 ரூபாய் தரும் திட்டம் என்பன போன்ற தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட திட்டங்களில் ஒன்றில் உடனே கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்த ஆணையிடலாம்.
அவருடன் அமைச்சர்களும் தலைமைச் செயலகத்திற்கு வந்து தங்களின் அறைக்கு வருவார்கள். பின்னர் முதல்-அமைச்சர் விஜய், இடைக்கால சபாநாயகரை நியமித்து உத்தரவிடுவார். இடைக்கால சபாநாயகருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளிலும் உள்ள வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சட்டசபைக்கு வர அழைப்புவிடுக்கப்படும். இடைக்கால சபாநாயகர் குறிப்பிட்ட நாளில் அவர்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொள்வார்கள், பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடத்தப்படும்.


Click it and Unblock the Notifications

