இந்திய விமான போக்குவரத்து துறையில் முக்கிய தூணாக மாறியிருக்கும் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களை தனது முக்கிய முதலீட்டாளராக மாற்றியுள்ளது.
ஆம், பல வார பேச்சுவாத்தைக்கு பின்பு சிங்கப்பூர் அரசு முதலீட்டு நிறுவனமான Temasek, அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக், விப்ரோ குழுமத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி-யின் சொந்த முதலீட்டு நிறுவனமான பிரேம்ஜி இன்வெஸ்ட், ஆல்பா வேவ் என 4 மெகா முதலீட்டு நிறுவனங்கள் இணைந்து அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தில் சுமார் 5.54 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் விமான பயணிகள் எண்ணிக்கைக்கு சேவை அளிப்பதில் அதானி குழுமம் தலையாய நிறுவனமாக உருவாகி வருகிறது. அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இயங்கி வரும் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் 8 விமான நிலையங்களை முழுமையாக நிர்வாகம் செய்து வரும் நிலையில், தனது நிறுவனத்தில் இருந்து சுமார் 5.54 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்ட முடிவு செய்துள்ளது.
இதற்காக அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் புதிய பங்குகளை உருவாக்கி இந்த 5.54 சதவீத பங்குகளை 3 பகுதிகளாக சுமார் 9825 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து முதலீட்டை திரட்ட உள்ளது. இதன் மூலம் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் சுமார் 18 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றுள்ளது.
இந்த 18 பில்லியன் டாலர் மதிப்பீடு தான் அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக இருக்கப்போகிறது. அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தை தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிட்டாலோ அல்லது புதிதாக முதலீட்டை திரட்டினாலோ அதிக மதிப்பீட்டில் முதலீட்டை திரட்ட முடியும். சமீபத்தில் ரிலையன்ஸ் பிரெஷ் இஸ்யூ பங்குகள் மூலம் ஜியோ நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் பணியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் டீமெர்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் நிறுவனம் திரட்டப்படும் முதலீடுகள் ஏர்போர்ட் நிர்வாக மேம்பாட்டுக்கும், ஏர்போர்ட் தொடர்பான வர்த்தக கட்டமைப்புகளின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதானி ஏர்போர்ட்ஸ்-ன் தாய் நிறுவனமான அதானி எண்டர்பிரைஸ் நிறுவனம் ஜூலை மாதம் சுமார் 15000 கோடி ரூபாய் முதலீட்டை QIP வாயிலாக திரட்டியது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்திற்கு விமான போக்குவரத்து துறையில் தற்போது 2 மிகப்பெரிய வர்த்தக விரிவாக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
முதலாவது மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் சுமார் 11 விமான நிலையங்களை 5 தொகுதிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது, இதில் சமீபத்தில் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்ட திருச்சி விமான நிலையமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 11 விமான நிலையங்களை கைப்பற்றுவதில் அதானி குழுமம் கட்டாயம் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2வது வாய்ப்பு.. இந்தியாவில் விமான நிலைய ஆப்ரேட்டர்கள் விமான சேவையை துவங்கவோ அல்லது விமான சேவை நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கவோ அனுமதி வழங்க வேண்டும், இதன் மீது இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்ற கருத்தும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இதற்கு மத்திய அரசு தரப்பில் வெளியிட்ட விளக்கத்தில் அரசின் கொள்கை அளவில் இதற்கு எவ்விதமான தடையும் இல்லை என தெரிவித்தது. இதேவேளையில் சில PPP மாடலில் இயங்கும் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் உள்ளது.
இதற்கான முறையான தளர்வுகள் அளிக்கப்பட்டால் விமான நிலையங்களை கையாளும் அதானி ஏர்போர்ட்ஸ் மற்றும் GMR விமான சேவை நிறுவனத்தில் பங்குகளை பெறலாம்.
மத்திய அரசின் 11 விமான நிலைய தனியார்மயமாக்கலும், விமான சேவை துறையில் இறங்குவது என 2 மெகா வாய்ப்புகள் தற்போது அதானி குழுமத்திற்கு இருக்கும் வேளையில் இந்த முதலீடுகள் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


