ஒருபக்கம் இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்த நிலையில் இன்னொரு பக்கம் பிரபல தொழிலதிபர் அதானி பெங்களூரு ட்ரோன் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022' என்ற நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அவர் பேசியபோது ட்ரோன் இயந்திரத்தால் ஏற்படும் நன்மைகள், விவசாயத்திற்கு ஏற்படும் பயன்கள் ஆகியவை குறித்து விளக்கமாக கூறினார்.
அதானி
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி, பெங்களூரைச் சேர்ந்த ஜெனரல் ஏரோனாட்டிக்ஸ் என்ற ட்ரோன் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ்
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அதானி டிபன்ஸ் சிஸ்டம் அண்ட் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் பங்குகளை வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவம் - விவசாயம்
பெங்களூருவை சேர்ந்த ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ராணுவம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் ட்ரோன் திறன்களை பயன்படுத்தி, அந்த துறைகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இணைந்து செயல்படும்
குறிப்பாக விவசாய துறையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் செய்து வரும் நிலையில் தற்போது அதானி நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயத்தில் ட்ரோன்
விவசாயத் துறைக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு சேவைகள், பயிர் ஆரோக்கியம், துல்லியமான விவசாயம் மற்றும் மகசூல் கண்காணிப்பு ஆகியவற்றை ட்ரோன் மூலம் ஜெனரல் ஏரோநாட்டிக் நிறுவனம் செய்து சாதனை செய்து வருகிறது.
லாபம்
கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மிகப்பெரிய லாபத்துடன் இயங்கி வரும் நிலையில் தற்போது அதானி நிறுவனம் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளதால் மிகப்பெரிய அளவில் இந்நிறுவனம் எதிர்காலத்தில் லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications