இந்திய பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் முதலீட்டாளர்கள் உள்நாட்டு சந்தையைக் காட்டிலும் வெளிநாட்டுச் சந்தையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது, அதனால் மும்பை பங்குச்சந்தை எந்த அளவிற்குப் பாதிக்கப்படும் எனக் கணித்து வரும் அளவிற்குச் சர்வதேச சந்தையில் பல அதிரடியான மாற்றங்கள் நடைபெற்றுள்ளது.
இந்தத் தடுமாற்றத்தில் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் மிக முக்கியமான நிறுவனமாக விளங்கும் அதானி எண்டர்பிரைசர்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ்
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் இன்றைய வர்த்தகத்தில் 2,717.95 ரூபாய் என்ற 52 வார உயர்வை தொட்டு முதல் முறையாக இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 3.08 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள் இதுவரை 58.08 சதவீதம் வரையில் உயர்ந்து உள்ளது.
3 லட்சம் கோடி ரூபாய்
இந்தியாவில் 3 லட்சம் கோடி ரூபாய் என்ற சந்தை மதிப்பீட்டை தொட்ட அதானி குழுமத்தின் நான்காவது நிறுவனமாக அதானி எண்டர்பிரைசஸ் விளங்குகிறது. அதானி குழுமத்தில் அதானி டிரான்ஸ்மிஷன் 3.77 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீடு உடன் முதல் இடத்தில் உள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன்
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தைத் தொடர்ந்து அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் என 4வது நிறுவனமாக 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டைத் தொட்டு உள்ளது. இதன் மூலம் கௌதம் அதானி-யின் சொத்து மதிப்பு இன்று 2.33 சதவீதம் அதிகரித்து 129.9 பில்லியன் டாலராக உள்ளது.
நிஃப்டி 50 குறியீடு
நிஃப்டி 50 குறியீட்டில் ஸ்ரீ சிமென்ட் நிறுவனத்தை வெளியேற்றி விட்டு அதானி எண்டர்பிரைசஸ் நுழைய வாய்ப்புள்ளது என்று எடெல்விஸ் ரிசர்ச் அறிக்கை கூறியதை தொடர்ந்து இந்நிறுவன பங்குகள் உயரத் தொடங்கியது. இதன் மூலம் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 213 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை பெறும் என எடெல்விஸ் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
NSE குறியீடு
NSE குறியீடுகள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மறுசீரமைக்கப்படுகின்றன மற்றும் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் குறியீட்டுக் கூறுகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. என்எஸ்இ குறியீடுகளில் மாற்றங்கள் இம்மாதத்தின் இரண்டாம் பாதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.