இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் பல மாநிலங்களில் தற்போது தனது தொழிலை விரிவாக்கிக் கொண்டு வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெங்கால் சிலிக்கான் வேலியில் ஹைப்பர் ஸ்கேல் டேட்டா சென்டரை அமைப்பதற்காக மேற்கு வங்க மாநிலம் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.
இதனை அடுத்து மேற்கு வங்க மாநிலத்திலும் தனது தொழிலை அதானி நிறுவனம் விரிவுபடுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி எண்டர்பிரைசஸ்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகான் வேலியில் உயர் அளவிலான டேட்டா மையத்தை அமைக்க அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு மேற்குவங்க அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
51.75 ஏக்கர் நிலம்
இது குறித்து தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது, 'அதானி குழுமத்திற்கு 51.75 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு மேற்குவங்க அமைச்சரவை அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ளார். சிலிக்கன் வேலியில் 100% உயர் அளவிலான டேட்டா மையத்தை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் அமைக்கும் என்றும், இந்த திட்டத்திற்காக 51.75 ஏக்கர் நிலம் அதானி நிறுவனத்திற்காக 99 ஆண்டு குத்தகைக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெங்கால் சிலிக்கான் பள்ளத்தாக்கு
இந்த திட்டம் காரணமாக மேற்கு வங்க தொழில்துறை மேலும் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்படுகிறது. அதானி குழுமம் மேற்கு வங்க மாநிலத்தில் கால் வைத்திருப்பதை அடுத்து பெங்கால் சிலிகான் வேலி பகுதியில் உள்ள ஐடி மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.10,000 கோடி முதலீடு
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் அதானி குழுமம், துறைமுகம் உள்கட்டமைப்பு, டேட்டா மையங்கள் மற்றும் கடலுக்கடியில் கேபிள்கள் பொருத்துதல் ஆகியவற்றை ஆகியவற்றில் ஈடுபடுவதற்காக ரூ.10,000 கோடி முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு
மேலும் காரக்பூர் வித்யாசாகர் தொழில் பூங்காவில் ஐந்து ஏக்கர் நிலத்தில் நான்கு சுழற்சி நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் என்றும் அமைச்சர் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி தெரிவித்தார்.