பில்லியனரான கெளதம் அதானி தலைமையிலான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், வரும் வாரத்தில் அதன் உரிமை பங்கீட்டினை செய்யவுள்ளது. இந்த உரிமைப் பங்கீட்டின் மூலம் 20,000 கோடி ரூபாய் நிதியினை திரட்டவுள்ளது.
இந்த வெளியீடானது ஜனவரி 27 அன்று தொடங்கவுள்ளது. இந்த எஃப் பி ஓ சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்லதொரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கினை தள்ளுபடி விலையில் வாங்க இது சரியானதொரு வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது.
எஃப்.பி.ஓ-வில் விற்பனை
இப்பங்கின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 3456.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் 3,94,029.99 கோடி ரூபாயாக உள்ளது. இந்த எஃப்.பி.ஓ-வில் பங்கு விற்பனையானது சந்தை மதிப்பினை காட்டிலும் 5 - 10% சரிவில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளி கடன்
அதானி குழுமத்தின் வெளி கடன் விகிதமானது சுமார் 33,517 கோடி ரூபாயாக இருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை எழுப்பிருந்தன. எனினும் கடன் வாங்கினாலும் அது ஆரோக்கியமான கடன் என்றும் ஒரு தரப்பு கூறியிருந்தது. இதற்கிடையில் தான் இந்த நிதி திரட்டலும் வந்துள்ளது.
எவ்வளவு விலை?
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ மூலம் 6,47,38,475 பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதில் குறைந்தபட்சம் 4 பங்குகளை வாங்கிக் கொள்ளலாம். அதிகபட்சமாக 4-ன் மடங்கில் வாங்கிக் கொள்ளலாம். இந்த வெளியீட்டில் ஒரு பங்கினை குறைந்தபட்சம் 3112 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே பிரைஸ் கேப் விலை 3276 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சில்லறை முதலீட்டாளார்களுக்கு தள்ளுபடி
சில்லறை முதலீட்டாளர்களுக்கு 64 ருபாய் தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டில் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஜனவரி 25 அன்று வெளியிடப்படும் என்றும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஜனவரி 27 அன்றும், கடைசி தேதியாக ஜனவரி 31 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
யார் நிர்வாகம்?
இந்த எஃப்.பி.ஓ-வினை ஆக்ஸிஸ் கேப்பிட்டல், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், ஜெப்பரீஸ் இந்தியா, எஸ்பிஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ், பிஓபி, கேப்பிட்டல் மார்கெட்ஸ், ஐடிபிஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் & செக்யூரிட்டீஸ், ஜேஎம் பைனான்ஷியல், ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ், மோனார்ச் நெட்வொர்த் கேப்பிட்டல், எலாரா கேப்பிட்டல், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பலரும் இந்த வெளியீட்டினை நிர்வகிக்கின்றனர்.
இரண்டாவது பெரிய FPO
இந்தியாவின் இரண்டாவது பெரிய எஃப்.பி.ஓ-வான 20,000 கோடி ரூபாயாக திரட்ட திட்டமிட்டுள்ளது. இதே முதலாவதாக கோல் இந்தியா நிறுவனம் 22,558 கோடி ரூபாய் நிதியினை எஃப்.பி.ஓ மூலம் திரட்டியிருந்தது. இதே யெஸ் வங்கி 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை திரட்டியிருந்தது.
அதானி குழுமம் இந்த நிதியினை பல காரணங்களுக்காக திரட்டியுள்ளது. இது மறுமுதலீடு மற்றும் கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட சில காரணங்களை கூறியுள்ளது.
பொது மக்கள் வசம்
அதானி குழுமம் இந்த நிதி திரட்டலுக்கு கடந்த நவம்பர் மாதமே ஒப்புதலை அளித்திருந்தது. எஃப்.பி.ஓ-மூலம் தற்போது ப்ரோமோட்டர் குழுமத்தின் வசம் பங்கு 72.63% அல்லது 82,79,49,621 ஈக்விட்டி பங்குகள் நிறுவனத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் பொது பங்குதாரர்கள் 27.36% பங்கினை வைத்துள்ளனர்.