மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகிய இரண்டும் மே 25 முதல் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு கட்டமைப்பின் கீழ் வைப்பதாக அறிவித்த நிலையில் வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 2 சதவீதத்திற்கு அதிகமாக சரிந்தன.
ஆனால் மெல்ல மெல்ல முதலீடுகளை பெற்றதன் மூலம் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் மதியம் 2.35 மணிக்கு 1.59 சதவீதம் உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டு, ஒரு பங்கு விலை 2516.25 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் 2437.00 ரூபாய் வரையில் சரிந்துள்ளது அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள்.
புதன்கிழமை பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய இரு பங்குச்சந்தைகளும் தனித்தனி அறிக்கையில், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு கட்டமைப்பின் கீழ் வைப்பதால் இதன் மார்ஜின் விகிதம் அதிகபட்ச வரம்பு அளவான 100 சதவீதமாக இருக்கும், இது மே 26, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தது.
மார்ச் மாதத்தில், பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய இரு பங்குச்சந்தைகளும் குறுகிய கால ASM கட்டமைப்பிலிருந்து அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தை நீக்கியது. இதற்கிடையில் தற்போது இரு சந்தைகளும் கூடுதல் கண்காணிப்பில் சேர்ந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்து 2,425.35 ஆக குறைந்தது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியதை போல், அதானி குழும நிறுவனங்களில் பங்கு விலை கையாளுதலுக்கான எந்த விதமான ஆதாரமும் தற்போதைய விசாரணையில் கிடைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அறிவித்தது. இதன் மூலம் கடந்த மூன்று நாட்களில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 39.41 சதவீதம் உயர்ந்தது.
இந்த தடாலடி உயர்வை பணமாக்க முடிவு செய்த ரீடைல் முதலீட்டாளர்கள் புதன்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான அதான் எண்டர்பிரைசஸ் பங்குகளை விற்பனை செய்ய துவங்கினர். இதனாலேயே அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்தது.
தற்போது அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஆனாலும் கௌதம் அதானி-யின் அதானி குழுமத்தின் பங்குகள் மீது சந்தை வல்லுனர்கள் கலவையான விமர்சனத்தையே வைக்கின்றனர். செபிக்கு சுப்ரீம் கோர்ட் 3 மாத காலம் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், இதன் முடிவுகள் தான் அதானி குழுமத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
இந்த 3 மாத அவகாசம் அடிப்படையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி செபி அதானி குழுமம் குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.