இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனை மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி தலைமையிலான அதானி குழுமம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்த ஒப்பந்தம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு உடையது என்றும் மெட்ரோபோலிஸ் நிறுவனத்தின் சந்தை வரம்பு மற்றும் செயல்பாடுகளின் அளவைக் கொண்டு இந்த மதிப்பு மாறலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை உறுதி செய்யப்பட்டால் அதானி குழுமம் சுகாதாரத்துறையில் மிகப்பெரிய முதலீடு செய்யவுள்ளது என்பதும் இதனால் மிகப்பெரிய அளவில் சுகாதார துறை மேம்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் குறித்து அதானி குழுமம், அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மெட்ரோபோலிஸ் நிறுவனங்கள் இதுவரை எந்தவித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோபோலிஸ்
மெட்ரோபோலிஸ் நிறுவனம் கடந்த 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 19 மாநிலங்களில் மிகவும் பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்துறை
கடந்த மே 19ஆம் தேதியன்று அதானி குழுமம் சுகாதாரத் துறையில் நுழைய இருப்பதாக அறிவித்ததை அடுத்து அந்நிறுவனம் வாங்கப்போகும் நிறுவனம் மெட்ரோபோலிஸ் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அதானி குழுமம்
அதானி குழும நிறுவனங்களில் ஒன்றான அதானி ஹெல்த் கேர் என்ற நிறுவனம் மருத்துவம் மற்றும் நோயறிதல், மருத்துவமனை வசதிகளை அமைத்தல் உள்பட சுகாதாரம் தொடர்பான பல நடவடிக்கைகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்த உள்ளதாக ஏற்கனவே அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் லிமிடெட் ஆகியவை கடந்த மே மாதம் 17ஆம் தேதி இணைந்துள்ளது. இந்த நிறுவனம் மருத்துவம் மற்றும் நோயறிதல் வசதி, சுகாதார உதவிகள், சுகாதார தொழில்நுட்ப அடிப்படையிலான வசதி, ஆராய்ச்சி மையங்களை அமைத்தல் ஆகியவை தொடர்பான செயல்பாடுகளை செய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அசுர வளர்ச்சி
2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தி வரும் அதானி குழுமம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக சிமெண்ட் மற்றும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் இந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அப்பல்லோ
அதேபோல் தற்போது இந்தியாவில் சுகாதாரத்துறை வருங்காலத்தில் அதிவேகமாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தத் துறையில் மருத்துவத்துறையில் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ள அப்பல்லோவுடன் கைகோர்த்து அதானி நிறுவனம் களமிறங்க உள்ளதை அடுத்து சுகாதாரத்துறை இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.