அதானி குழுமம் கடந்த சில தினங்களாகவே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது எனலாம். மிகப்பெரிய நிதி திரட்டலுக்கு திட்டமிட்டுள்ள நிலையில், இப்படி ஒரு அறிக்கை வெளியாகியிருப்பது முதலீட்டாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.
இதற்கிடையில் யாரைத் தான் நம்புவது என்ற குழப்பம் முதலீட்டளார்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உண்மையில் அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையினை போல மோசடிகளை கணக்கு காட்டியே பங்கு சந்தையில் உயர்ந்ததா? இது குறித்து செபி சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும். இதற்கிடையில் அதானி நிறுவனத்தின் கடன் விகிதம் தான் என்ன? வங்கிகளின் அதானியின் நிலைப்பாடு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பில்லியனர்
சமீபத்திய ஆண்டுகளாகவே மிக வேகமாக வளர்ந்து வரும் அதானி குழுமம், இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமாக மாறியுள்ளது எனலாம். சாதாராண தொழிலதிபராக இருந்து இன்று உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ள அதானி, உலக பில்லியனர்களில் 4வது இடத்தில் உள்ளார்.
எப்படி சாத்தியம்?
கடந்த ஆண்டின் இறுதியில் அதானி ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் கடன நிர்வகிக்கும் உறுதியினை உங்களுக்கு எது தருகின்றது? கடனை எப்படி திரும்ப செலுத்துவீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இது பதிலளித்த அதானி நிறுவனம் அடிப்படையில் வலுவானதொரு நிதி நிலைமையோடு உள்ளது என கூறியிருந்தார்.
லாபம் அதிகரிப்பு
மேலும் கடந்த 9 ஆண்டுகளில் எங்களின் கடன் விகிதத்தினை விட லாப வீதம் அதிகரித்துள்ளது. எங்களின் கடன் மற்றும் எபிட்டா விகிதம் 7.6%ல் இருந்து 3.2% ஆக சரிவினைக் கண்டுள்ளது. ஆக இது ஆரோக்கியமானதொரு விஷயம். நாங்கள் நிதி ரீதியாக மிக வலுவாக இருக்கிறோம். இதற்கிடையில் தான் பல புதிய வணிகங்களையும் கையகப்படுத்தியும் வருகிறோம் என கூறியிருந்தார்.
வங்கிக் கடன் குறைந்திருக்கு தெரியுமா?
அத்தோடு பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலான கடன் இருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு. 9 ஆண்டுகளுக்கு முன்ப எங்களது கடனில் 86% வங்கிகளிடம் இருந்து தான் பெறப்பட்டது. ஆனால் இது தற்போது 32% ஆக குறைந்துள்ளது. சுமார் 50% கடன்கள் சர்வதேச பத்திரம் மூலம் திரட்டப்பட்டது என்றும் கூறியிருந்தார். அதோடு சர்வதேச முதலீட்டாளர்கள் மிகவும் புத்திசாலிகள். பலகட்ட ஆய்வுகளை செய்து நம்பிக்கை ஏற்பட்ட பிறகே முதலீடு செய்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
CLSA அறிக்கை என்ன சொல்லுது?
இதற்கிடையில் அதானி குழுமத்தின் கடன் குறித்து CLSA அறிக்கையில், அதானி குழுமத்தின் கடனில் குறைந்தபட்சம் 40% பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டது. இதில் வெளி நாட்டு வங்கிகளின் பங்கு முக்கியமானது.
கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் அதானி குழுமத்தின் கடன் விகிதமானது 1 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் இந்திய வங்கிகளின் கடன் விகிதம் என்பது கணிசமாக குறைந்துள்ளது என சுட்டிக் காட்டியுள்ளது.
வங்கிக் கடன் எவ்வளவு?
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி கிரீன் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் கடனை CLSA திரட்டியுள்ளது. இவற்றில் 2 லட்சம் கோடி ரூபாய் கடனில் சுமார் 70,000 - 80,000 கோடி ரூபாய் கடன் வங்கி கடனாக இருந்ததாக மதிப்பிட்டுள்ளது.
வங்கிக் கடன் குறைவே
ஓட்டுமொத்தமாக பார்க்கும்போது வங்கிகளில் இந்த குழுமத்தின் கடன் விகிதமானது குறைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அதானி குழுமம் பெற்ற கடன் ஆனது 1 லட்சம் கோடி ரூபாயில், வெறும் 15,000 கோடி ரூபாய் மட்டுமே வங்கிக் கடன் என்றும் மதிப்பிட்டுள்ளது. குறிப்பாக இந்த கடன் திரட்டலில் தனியார் வங்கிகளின் விகிதம் என்பது 2% கீழாகவே இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
வெளி நாட்டு வங்கிகளே கடனுதவி
அதானியின் சமீபத்திய கையக்கப்படுத்தலான ஹோல்சிம் நிறுவனத்திற்கு தேவையான சுமார் 42,000 கோடி ரூபாய் நிதியினை கூட, வெளி நாட்டு வங்கிகளிடம் இருந்தே திரட்டியதையும் CLSA சுட்டிக் காட்டியுள்ளது.
அதானி குழுமத்தில் கடந்த 2016ம் நிதியாண்டில் சுமார் 86% வங்கிக் கடனாக இருந்தது. எனினும் 2022ம் நிதியாண்டில் 40% ஆக குறைந்துள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகளில் 55% என்ற விகிதத்தில் இருந்து 25% ஆக குறைந்துள்ளது. இதே தனியார் வங்கிகளில் 31% என்ற விகிதத்தில் இருந்து, 8% ஆக குறைத்துள்ளது.
முக்கிய துறைகள்
மொத்தத்தில் இந்திய வங்கிகளின் கடன் விகிதம் என்பது மொத்த கடனில் 40% கீழாகவே உள்ளது. இதில் தனியார் வங்கிகளின் பங்கு 10% குறைவாகவே உள்ளது. இதில் பெரும்பாலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பது வலுவான பணப்புழக்கங்களுடன் பெரும்பாலும் நிதியளிக்கப்பட்ட துறைகளாக உள்ளதாக CLSA தெரிவித்துள்ளது. இந்த விகிதமானது 2024ம் நிதியாண்டில் இன்னும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கு எவ்வளவு கடன்?
கடன் (டெர்ம் லோன், செயல்பாட்டு மூலதனம் மற்றும் பிற கடன்கள்) மொத்த கடனில் 38% ஆகும். இதே பத்திரங்கள்/CP பங்கு 37%மும், 11% நிதி நிறுவனங்களிடம் இருந்தும் கடன் வாங்கியுள்ளது. 12 - 13% கடன் விகிதம் குழுக்களுக்கு இடையேயான கடனாக உள்ளதாகவும் CLSA சுட்டிக் காட்டியுள்ளது. தனியார் வங்கிகளை பொறுத்தவரையில் அவர்களின் கடன் விகிதத்தினை ஒட்டுமொத்தமாக ஏற்கனவே குறைத்துவிட்டனர். பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரையில் கடன் விகிதம் அதிகரிப்பு என்பது அர்த்தமுள்ள கடனாக இருப்பதாக தெரியவில்லை என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் சமீபத்திய கையகப்படுத்தல்களில் பெரும்பாலானவை வெளி நாட்டு நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகின்றன.