மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக விற்க தயாராகிக் கொண்டிருக்கும் செய்தியை நாம் அறிவோம்.
ஏன் இந்த முறை ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது என்று கேட்கிறீர்களா..?

கடந்த முறைகளில் எல்லாம் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை (76 %) மட்டுமே விற்க, மத்திய அரசு தயாராக இருந்தது.
ஆனால் இந்த முறை ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்க, மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதனால் தான் ஏர் இந்தியா விற்பனையும் செய்திகளில் அதிகம் அடிபடத் தொடங்கி இருக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கடந்த மார்ச் 31, 2019 நிலவரப்படி சுமார் 60,000 கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம். புதிதாக ஏர் இந்தியா நிறுவனத்தில் வாங்க இருப்பவர்கள், இந்த கடனில் சுமார் 23 ஆயிரத்து 286 கோடி ரூபாய் கடனை சமாளிக்க வேண்டி இருக்குமாம்.
ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அனைத்தையும் சேர்த்து 146 விமானங்கள் ஏர் இந்தியா வசம் இருக்கிறதாம்.
வரும் 2020 - 21 நிதி ஆண்டில், மத்திய அரசு தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பங்குகளை விற்று 2.1 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இந்த இலக்கை அடைய ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் விற்பனையும் கை கொடுக்கும் என்கிறார்கள்
இந்த ஏர் இந்தியா நிறுவனத்தில் விற்பனை டீலில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு புதிய நபரின் பெயர் அடிபடத் தொடங்கி இருக்கிறது. அவர் தான் தொழிலதிபர் கௌதம் அதானி.
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க கௌதம் அதானியின் அதானி குழுமம் கூட விருப்பம் தெரிவிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இப்போது வரை இந்த செய்தியை அரசோ அல்லது அதானி குழுமமோ உறுதிப்படுத்த வில்லை.
ஏற்கனவே கௌதம் அதானியின், அதானி குழுமம் சமையல் எண்ணெய் தொடங்கி சுரங்க வேலைகள் வரை பல வியாபாரங்களில் கிளை பரப்பி வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அது போக சமீபத்தில் கூட இந்தியாவில் இருக்கும் 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் ஒப்பந்தத்தைக் கூட பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications