இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பில்லியனர் ஆன கெளதம் அதானி அடுத்த ஆண்டில் 10 பில்லியன் டாலர் கடனை, குறைந்த வட்டியில் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதானி குழுமம் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. பல திட்டங்களை மேம்படுத்த முயன்று வருகின்றது.
இதற்கிடையில் பெரியளவில் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
நிதி திரட்டல் எப்படி?
இந்த நிதி திரட்டலை அன்னிய கடன், பசுமை பத்திரங்கள் மூலம் 6 பில்லியன் டாலரும், இது தவிர உயர்ந்த வட்டியில் உள்ள கடனை குறைத்து, குறைந்த வட்டியில் கடன் வாங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான நடவடிக்கையானது தற்போதைய டிசம்பர் காலாண்டிலேயே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறைந்த கட்டணத்தில் சேவை
அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கையால் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் முதல் துறைமுக சேவை என அனைத்திற்கும் செலவழிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதிக வட்டியுள்ள சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் நிர்வாகத்திற்கு கூடுதல் நிதியளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
குறைந்த வட்டியில் வாங்க திட்டம்
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் வட்டி விகிதத்தின் மத்தியில், அசெட் அடிப்படையில் குறைந்த வட்டியில் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிதி திரட்டலானது சர்வதேச சந்தையின் நிலவரத்தினை பொறுத்து மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை
இந்த திரட்டலில் சிங்கப்பூர் நிறுவனமான GIC pte, temasek holdings pte உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சு வார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் தெரிகிறது.
புது புது துறைகளில் முதலீடு
தற்போது அதானி குழுமம் வேகமாக பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறது. பல துறைகளில் விரிவாக்கம் செய்து வருகின்றது. குறிப்பாக புது புது துறைகளில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றது. இது ஆரோக்கிய கடனாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் சமீபத்தில் அதானி குழுமத்தின் கடன் குறித்து ஆய்வு நிறுவனம் கவலை எழுப்பியுள்ளது.