அதானி குழுமம், சர்வதேசப் பத்திரங்கள் மூலம் 500 மில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டும் திட்டத்தைக் கைவிட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், இந்தியாவின் இன்பரா வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த ஆண்டு ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது.
இவ்விரு நிறுவனங்களைக் கைப்பற்றச் சர்வதேச வங்கிகளிடம் வாங்கிய சுமார் 4.5 பில்லியன் டாலர் கடனின் முதல் தவணையைச் செலுத்துவதற்குப் போதுமான நிதியைத் திரட்ட, தனது நிறுவனத்தின் உள் வருவாயில் இருந்து நிலுவைத் தொகையைச் செலுத்துவது உட்படப் பிற நிதி திரட்டும் வாய்ப்புகளை ஆராய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமம்
அதானி குழுமத்தின் ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்கான அசல் கடன் ஒப்பந்தத்தின் பிடி, இந்த நிதியுதவியை ஈடு செய்ய 500 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட வேண்டும். மேலும் இது வருகிற மார்ச் மாதத்திற்குள் நடக்க வேண்டும்.
500 மில்லியன் டாலர்
தற்போது அதானி குழுமம் இருக்கும் நிலையில் 500 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட வாய்ப்புகள் மிகவும் குறைவு. குறிப்பாக இந்தப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டினால் அதை மீட் டூ லாங் டேர்ம் அடிப்படையில் மீண்டும் செலுத்த வேண்டும்.
ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ்
கடந்த ஆண்டு ஜூன் மாதம், அதானி குழுமம் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனங்களைக் கையகப்படுத்துவதற்கு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (SCB), Deutsche Bank மற்றும் Barclays உட்படச் சுமார் 14 சர்வதேச கடன் வழங்குநர்களிடமிருந்து சுமார் 4.5 பில்லியன் டாலர் தொகையைக் கடனாகத் திரட்டியது.
கடன் ஒத்திவைப்பு
அதானி குழுமம் 4.5 பில்லியன் டாலர் கடனின் முதல் தவணையைச் செலுத்துவதற்குப் போதுமான நிதியை திரட்ட மாற்று வழிகளைத் தேடி வரும் இதேவேளையில் இந்தக் கடனுக்கான தவணையை 2024, 2025, 2026 ஆம் ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க 14 வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
S&P Global முடிவு
அதானி குழுமம் பத்திரங்கள் அல்லாமல் மாற்று வழிகளில் கடனுக்கான நிதியை திரட்ட முக்கியக் காரணம் உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனமான S&P Global Ratings வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிப்பில் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் & SEZ லிமிடெட் ஆகிய 2 நிறுவனத்தின் மதிப்பீட்டை Stable என்ற நிலையில் இருந்து Negative ஆக மாற்றியுள்ளது.
Citigroup, கிரெடிட் சூசி
ஏற்கனவே Citigroup, கிரெடிட் சூசி நிறுவனங்கள் மார்ஜின் கடன்களுக்குக் கௌதம் அதானி-யின் குழும நிறுவனங்களின் பத்திரங்களைப் பிணையமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி, அதானி எலக்ட்ரிசிட்டி
இதில் முக்கியமாகக் கிரெடிட் சுசூசி ஏஜி நிறுவனம் அதானி போர்ட்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை ஆகிய நிறுவனம் வெளியிட்ட பத்திரங்களுக்கு zero-lending value மதிப்பீட்டை வழங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த 3ல் 2 நிறுவனங்களுக்கான ரேட்டிங்-ஐ S&P Global Ratings அதிரடியாகக் குறைத்துள்ளது.