இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபரான கெளதம் அதானி, சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் மிக வேகமாக ஏற்றம் கண்டு வருகின்றார். இது நல்ல விஷயம் தான் என்றாலும் மறுபுறம் இவரின் கடன் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் ஆராய்ச்சி நிறுவனமான பிட்ச் குழுமத்தின் பிரிவான கிரெடிட்சைட்ஸ், அதானி குழுமம்: ஓவர்லீவரேஜ்டு (Overleveraged) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையினை வெளியிட்டது.
அதில் அதானியின் விரிவான லட்சிய கடன்கள், எதிர்காலத்தில் பெரும் கடன் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம் என்றும் எச்சரித்திருந்தது. இதனால் அதானி குழும நிறுவனங்கள் எதிர்காலத்தில் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்றும் எச்சரித்திருந்தது.
PSB-ல் பாதியாக குறைந்த கடன்
இதனால் முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் தயக்கம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் அதானி குழுமம் இது குறித்து விளக்கமளித்துள்ளது. அதில் அதன் செயல்பாட்டு லாபம் அதிகரித்துள்ளதை சுட்டி காட்டிய நிறுவனம், அந்த லாப விகிதத்தில் நிகர கடனையும் மேற்கோளிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன்களை பாதியாக குறைத்துள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. இதன் மூலம் அதிக கடன் என்ற கவலை வேண்டாம் எனும் விதமாக சுட்டிக் காட்டியுள்ளது.
நிகர கடன் சரிவு
அதானி குழுமத்தின் இந்த விளக்கமானது கிரெடிட்சைட்ஸ் அறிக்கைக்கு பிறகு வந்துள்ளது. எபிடா விகிதத்தில் அதன் நிகர கடன் விகிதமானது கடந்த ஒன்பது ஆண்டுகளில் 7.6 மடங்கில் இருந்து, 3.2 மடங்காக குறைந்துள்ளதாக அதானி குழுமம் சுட்டிக் காட்டியுள்ளது.
மொத்த கடன் எவ்வளவு?
வணிகம் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் தோற்றம், எளிய ஆனால் மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய வலுவான வணிக மாதிரியில் செயல்படுகின்றது. மார்ச் 2022ல் அதானிக குழுமத்தின் மொத்த கடன் 1.88 டிரில்லியன் ரூபாயாகும். இதே இதன் நிகர கடன் மதிப்பு 1.61 டிரில்லியன் ரூபாயாகும்.
வங்கிகளில் கடன் சரிவு
கடந்த 2015 - 2016ம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகளில் 55% கடன் பெறப்பட்டிருந்தது. ஆனால் இது 2021 - 2022ல் PSBல் பெறப்பட்ட கடன் 21% ஆக குறைந்துள்ளது.
இதே 2016ம் நிதியாண்டில் தனியார் வங்கிகளில் 31% அளவுக்கு கடன் பெற்றிருந்தது. ஆனால் இது தற்போது 11% என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதேசமயம் பத்திரங்கள் முலம் நிதி திரட்டுவது 14% அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளில் அதன் பங்குகள் மூலமும் அதானி தொடர்ந்து அதிகளவில் நிதி திரட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து விரிவாக்கம்
'கடந்த சில ஆண்டுகளாகவே அதானி குழுமம் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு துறைகளிலும் விரிவாக்கம் செய்து வருகின்றது. பல புதிய புதிய துறைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தொடர்ந்து அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் அதானியின் CAGR விகிதமும் தொடர்ந்து வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது.