உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னேறி வரும் கௌதம் அதானியின் நிறுவன பங்குகள் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவிலான சரிவை அடைந்தது, இந்தச் சரிவுக்குப் பின்னால் இந்திய பத்திர வைப்பு அமைப்பான NSDL-ன் நடவடிக்கை இருப்பது தான் தற்போது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள 4 அதானி குழும நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கும் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் கணக்கை முடக்கியுள்ளது NSDL அமைப்பு.
இதன் எதிரொலியாகவே திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தது.
3 வெளிநாட்டு நிறுவனங்கள்
அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்கள் 43,500 கோடி ரூபாய் மதிப்பிலான அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளைத் தனது FPI கணக்கில் வைத்துள்ளது.
43,500 கோடி ரூபாய் மதிப்பிலான அதானி பங்குகள்
இந்நிலையில் NSDL அமைப்பு அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்களின் FPI கணக்கை மே 31ஆம் தேதியன்று முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தகவல் தற்போது தான் வெளியாகி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
NSDL அமைப்பு
NSDL அமைப்பு FPI கணக்கை முடக்கியதன் மூலம் இந்தக் கணக்குகளில் இருக்கும் பங்குகளை விற்க முடியாது, புதிதாகப் பங்குகளை வாங்கவும் முடியாது, கணக்கில் இருக்கும் பணத்தையும் எடுக்கவும் முடியாது. எதற்காக இந்த நிறுவன கணக்குகள் முடக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஓரே முகவரி, பணச் சலவை.. எது உண்மை..?
பிஸ்னஸ் டெய்லி என்ற ஒரு பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவல்கள் படி குறிப்பிட்டு உள்ள 3 நிறுவனங்களும் மொரீஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் பகுதியைச் சேர்ந்த ஒரே முகவரியில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் எக்னாமிக் டைம்ஸ் Prevention of Money Laundering Act (PMLA) கீழ் NSDL அமைப்பு நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனக் கூறியுள்ளது.
செபி விசாரணை
இதற்கிடையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதானி குரூப் பங்குகளின் விலை கடந்த ஒரு வருடத்தில் 200 சதவீதம் முதல் 1000 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கும் தடை செய்யப்பட்ட 3 நிறுவன கணக்குகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் ஆலோசனை செய்து வருகிறது.
அதானி குழுமம் விளக்கம்
இந்நிலையில் அதானி குழுமம் மாலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்களின் FPI கணக்கை NSDL அமைப்பு முடக்கியதில் அதானி குழுமத்தின் பெயர் வருவது முற்றிலும் பிழையானது. இது முதலீட்டாளர்களும், நிறுவனத்தின் நற்பெயருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கணக்குகள் ஹோல்ட் செய்யப்பட்டு உள்ளது
மேலும் குறிப்பிட்ட நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்படவில்லை (Forzen) ஹோல்ட் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது என Registrar and Transfer Agent எழுத்துப்பூர்வமாக மின்னஞ்சல் மூலம் உறுதி செய்துள்ளது என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
ஓரே நாளில் 53000 கோடி ரூபாய் இழப்பு
NSDL உத்தரவு மூலம் இன்றைய வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு பெரும் சரிவை எதிர்கொண்டது.
அதானி போர்ட்ஸ் & SEZ - 14,558 கோடி ரூபாய் இழப்பு
அதானி பவர் - 2,854 கோடி ரூபாய் இழப்பு
அதானி டிரான்ஸ்மிஷன் - 9,347 கோடி ரூபாய் இழப்பு
அதானி எண்டர்பிரைசர்ஸ் - 11,015 கோடி ரூபாய் இழப்பு
அதானி கிரீன் எனர்ஜி - 6,530 கோடி ரூபாய் இழப்பு
அதானி டோட்டல் கேஸ் - 8,941 கோடி ரூபாய் இழப்பு