என்டிடிவி குழுமத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்கி உள்ளதாக வெளியான செய்தி குறித்து நேற்று பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த செய்தி வெளியானதை அடுத்து இன்று காலை பங்குச்சந்தையில் என்டிடிவி டிவியின் பங்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 14 ஆண்டுகளில் இல்லாத அளவு என்டிடிவியின் பங்குகள் ரூபாய் 384.50 என்ற விலையில் பங்குச்சந்தையில் வர்த்தகமாகி உள்ளதாகவும் இதனால் இந்த பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் என்றும் கூறப்படுகிறது.
அதானி குழுமம்
என்டிடிவி பங்குகளை இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமம் வாங்கி உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பில் சில சர்ச்சைகள் இருந்தாலும் இந்த தகவல் பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பங்குகள் விலை உயர்வு
என்டிடிவி பங்குகளின் விலை இன்று காலை பங்குச்சந்தை ஆரம்பமானவுடன் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை அதிகரித்துள்ளது. என்டிடிவி பங்குகளை அதானி நிறுவனம் வாங்கிய நிலையில் பிற பங்குதாரர்கள் தங்களது பங்குகளை அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யலாம் அல்லது தொடர்ந்து அவர்களே வைத்திருக்கலாம் என்ற அறிவிப்பு ஒன்றை அதானி குழுமம் அறிவித்திருந்தது.
1.16 மில்லியன் பங்குகள்
அதானி குழுமத்தின் வசம் தற்போது 1.16 மில்லியன் பங்குகள் இதுவரை கைமாறியுள்ளதாகவும் இன்னும் 98,170 பங்குகள் என்எஸ்இ, பிஎஸ்இ அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அதானி கட்டுப்பாட்டுக்குள் என்டிடிவி
கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று என்டிடிவியின் பங்குகள் ரூ. 384 என அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தையின் விதியின்படி ஒரு நிறுவனத்தின் 26 சதவீத பங்குகள் இருந்தால் அந்த நிறுவனத்தின் முடிவை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதானி குழுமத்திடம் 29.11 சதவீத பங்குகள் இருப்பதால் என்டிடிவி குழுமம் அதானி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.
பிரன்னாய் ராய் - ராதிகா ராய்
பிரன்னாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 1984ஆம் ஆண்டு என்டிடிவி நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிறுவனத்தில் 464 பணியாளர்கள் பணி செய்கின்றனர் என்பதும் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.72 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.