இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி தனித்தனி வர்த்தகப் பாதையில் பயணித்துக்கொண்டு இருந்த வேளையில் புதிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பிடிக்க வேண்டும் என்பதற்காக இருவரும் மாறி மாறி போட்டிப்போடத் துவங்கியுள்ளனர்.
இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால் முகேஷ் அம்பானி ஆதிக்கம் செலுத்தும் மீடியா துறையில் புதிய நிறுவனத்தைத் துவக்கியுள்ளார் அதானி, அதேதொடர்ந்து ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் எதிர்காலம் இனி டெலிகாம் தான் என்று இருக்கும் போது, அதிலும் கௌதம் அதானி போட்டிப்போட வந்திருக்கிறார் என்பது தான் தற்போது சூடான மேட்டராக உள்ளது.
கௌதம் அதானி
இந்தியாவின் பெரும் பணக்காரராக விளங்கும் கௌதம் அதானி ஜூலை 26ஆம் தேதி நடக்க இருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சர்ப்ரைஸ் ஆகப் பங்குகொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதானி வருகை
ஏற்கனவே அம்பானியின் ஜியோ வருகையால் 10க்கும் அதிகமான டெலிகாம் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் அதானி வருகையால் மீதமுள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியாவுக்கு முடிவுக்காலம் வந்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
ஜூலை 26ஆம் தேதி நடக்க இருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உடன் கௌதம் அதானி மட்டும் அல்லாமல் 5ஜி சேவை அளிக்கக் கூடிய நிறுவனங்களும் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 4 நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்குபெற விண்ணப்பம் செய்துள்ளது.
இந்திய டெலிகாம் சந்தை
தற்போது இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4வதாக அதானி குழுமம் விண்ணப்பித்து உள்ளது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
டெலிகாம் சேவை உரிமம்
அதானி குழுமத்திடம் நேஷ்னல் லாங் டிஸ்டன்ஸ் (NLD) மற்றும் இண்டர்நேஷ்னல் லாங் டிஸ்டன்ஸ் (ILD) சேவைக்கான லைசென்ஸ் உள்ளது. ஸ்பெக்டரம் ஏலத்தில் விண்ணப்பம் செய்யப்பட்ட 4வது நிறுவனம் அதானி குழுமம் தான் என்பதை இக்குழுமம் உறுதி செய்யப்படாத நிலையில் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.
ரூ.4.3 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஏலம்
இதே வேளையில் ஜூலை 12 ஆம் தேதி யார் யார் விண்ணப்பித்து உள்ளனர் எனத் தகவலை வெளியிடப்படும். ஜூலை 26 ஆம் தேதி நடக்க இருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 72,097.85 MHz அளவிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விடப்படுகிறது, இந்த ஏலத்தின் மதிப்பு மட்டும் 4.3 லட்சம் கோடி ரூபாய்.