இந்தியாவில் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றான அதானியின் குழுமம் வெகு வேகமாக வளர்ச்சி கண்டு வந்து கொண்டுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின் படி, அதானிக்கு முன்னதாக பில்லியனர் ஆன முகேஷ் அம்பானி மட்டுமே இருந்தார்.
அதையும் விரைவில் பின்னுக்கு தள்ளி முதலிடத்தினை பிடிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இந்த நிலையில் ஜுன் 11 அன்று அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 9,50,000 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவில் 7,90,279 கோடி ரூபாயாக குறைந்து முடிவடைந்துள்ளது.
ஒரே வாரத்தில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது 1,59,721 கோடி ரூபாய் இழப்பினை சந்தித்துள்ளது.
பலத்த சரிவு
அதானி குழும நிறுவனத்தின் சில பங்குகள் பலத்த சரிவினைக் கண்டதையடுத்து, அதானி குழுமத்திற்கு இத்தகைய இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் மற்றும் அதானி பவர் உள்ளிட்ட பங்குகள் கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டன.
ஏற்றம் கண்ட அதானி பங்குகள்
அதானியின் சில நிறுவனங்கள் பலத்த சரிவினைக் கண்டிருந்தாலும், அதானியின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனங்கள் பெரியதாக சரிவினைக் காணவில்லை. மாறாக மற்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவினைக் கண்ட போது இந்த நிறுவனத்தின் பங்குகள் வாங்கப்பட்டன.
என்னென்ன பங்குகள்?
குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது முந்தைய வாரத்தினை காட்டிலும், 8.76% அதிகரித்து 1487.87 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது முந்தைய வாரத்தில் 1367.95 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7.39% அதிகரித்து 694.60 ரூபாயாகவும் அதிகரித்திருந்தது.
என்ன காரணம்?
அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனங்களாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் நிறுவனங்களின் கணிசமான பங்குகளை கைப்பற்றியுள்ள, மூன்று வெளி நாட்டு நிறுவன கணக்குகளை என்.எஸ்.டி.எல் ஹோல்டு செய்துள்ளது. என்.எஸ்.டி.எல்-லின் இந்த நடவடிக்கையானது சந்தையில் பெரும் சரிவினை ஏற்படுத்தியுள்ளது.
பங்குகள் விற்பனை
சந்தையில் தொடர்ந்த இந்த சரிவினையடுத்து, முதலீட்டாளர்கள் பாதுகாப்பு காரணம் காட்டி, தங்களது அதானி குழும பங்குகளை விற்பனை செய்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த திங்கட்கிழமையன்று காலை அமர்வில் மட்டும் அதன் சந்தை மதிப்பானது 10% சரிவினைக் கண்டது. கடந்த சில ஆண்டுகளாக அதானியால் பெற்ற லாபத்தினை, ஒரே வாரத்தில் இழந்துள்ளனர்.
பில்லியனர் லிஸ்ட்டில் மூன்றாவது இடம்
சந்தையில் ஏற்பட்ட இந்த பலத்த சரிவினால், அதானியின் மதிப்பு 77 பில்லியன் டாலரில் இருந்து 63.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதனால் அதானியால் ஆசியாவின் இரண்டாவது என்ற பெரிய பணக்காரர் என்ற இடத்தினை, நீண்டகாலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அதானி முதல் இட கனவு கனவாகவே போய்விட்டது எனலாம்.