இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமான அதானி குழுமம் பல விமான நிலையங்கள் மற்றும் துறைமுகத்தைக் கைப்பற்றி நாட்டின் போக்குவரத்தைப் பெரிய அளவில் மேம்படுத்தி வரும் நிலையில், தற்போது அதன் கிளை நிறுவனமான அதானி போர்ட்ஸ் தனது வர்த்தகச் சேவையை வெளிநாடுகளுக்கு விரிவாக்கம் செய்யும் முக்கியமான திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே இந்தியாவுக்கு வெளியில் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தோடு Abbot Point Terminal-ஐ இயங்கி வரும் நிலையில் தற்போது ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் இஸ்ரேல் துறைமுகத்தைக் கைப்பற்றியுள்ளது.
அதானி போர்ட்ஸ்
இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த போக்குவரத்து நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் (APSEZ) மற்றும் இஸ்ரேல் நாட்டின் Gadot குழுமம் இணைந்து இஸ்ரேல் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகமான ஹைஃபா-வை (Haifa) தனியார்மயமாக்கும் திட்டத்தின் மூலம் நீண்ட காலத் திட்டத்தை வென்றுள்ளது.
2 வருட போட்டி
அதானி போர்ட்ஸ் மற்றும் Gadot நிறுவன கூட்டணி மிகப்பெரிய போட்டிக்கு மத்தியில் வெற்றி பெற்ற நிலையில் ஹைஃபா போர்ட் நிறுவனத்தில் 100 சதவீத பங்குகளைப் பெற இரண்டு வருட போட்டி முடிவடைந்து, அடுத்தகட்ட பணிகளுக்கு இக்கூட்டணி நகர்ந்துள்ளது. இந்த ஹைஃபா போர்ட் இயக்கும் திட்டத்தின் சலுகை 2054 இல் முடிவடைகிறது.
போக்குவரத்து நிறுவனம்
APSEZ ஐ உலகளாவிய போக்குவரத்து நிறுவனமாக மாற்றுவதற்கு எடுத்து வைக்கப்படும் பெரிய படி இது எனவும், இந்த மாபெரும் இலக்கை அடைய லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கிடங்குகளை உள்ளடக்கியது என அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் (APSEZ)-ன் இயக்குனர் மற்றும் சிஇஓ-வான கரண் அதானி தெரிவித்துள்ளார்.
வர்த்தகக் கூட்டணி
இஸ்ரேல் நீண்ட காலமாக ஐரோப்பாவிற்கு முக்கிய வர்த்தகக் கூட்டணியாக இருக்கும் வேளையில் சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகள் உடனும் இதன் நட்புறவும் மேம்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதானி குழுமம் இஸ்ரேல் துறைமுகத்தைக் கைப்பற்றியிருப்பது இந்த 3 முக்கிய நாடுகளின் வழித்தடத்தில் துறைமுகம் மூலோபாயப் பங்கு வகிக்கும்.
70:30 ஒப்பந்தம்
அதானி போர்ட்ஸ் மற்றும் கடோட் குழுமத்தின் பங்குகள் 70:30 விகிதத்தில் உள்ளன. APSEZ முதலீட்டில் அதன் பகுதியை உள் திரட்டல் மூலம் நிதியளிக்கும் என்று கூறியுள்ளது. இந்தியா - இஸ்ரேல் மத்தியிலான வர்த்தகம் 1992 இல் $200 மில்லியன் டாலராக இருந்த நிலையில் ஏப்ரல் 2021-ஜனவரி 2022 காலகட்டத்தில் 6.35 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.