டெல்லி: மத்திய பிரதேசத்தில் 1320 மெகாவாட் அளவுள்ள தெர்மல் பவர் பிளான்ட் அமைக்க, மத்திய பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதானி பவர் கடந்த புதன் கிழமையன்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதானி பவர் ஆர்ம் பெஞ்ச் தெர்மல் ஆலையில் இருந்து முழு மின்சாரத்தினையும் மாநிலத்திற்கு விற்பனை செய்யவும் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பெஞ்ச் தெர்மல் எனர்ஜி நிறுவனம், எம்பி பவர் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன், 1320 மெகாவாட் மின்சாரத்தினை நீண்டகால அடிப்படையில் கொள்முதல் செய்வதற்காக மின் கொள்முதல் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மின் கொள்முதல் ஒப்பந்தத்தினை மத்திய பிரதேச மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முறையாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வளர்ச்சி மின் துறையின் நீண்டகால வளர்ச்சி திறன் குறித்த நிறுவனத்தின் நம்பிக்கையையும், அனைவருக்கும் மின் சக்தியின் லட்சிய இலக்கை அடைவதின் முக்கியத்துவத்தினையும் இது உறுதிப்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை மின் உற்பத்தி திறனை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் கிடைத்த அனுபவங்களை இணைப்பதில், அதானி நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 2.57% வீழ்ச்சி கண்டு 36.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
அதானி குழுமம் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,குறிப்பாக சுரங்க வணிகம், நிலக்கரி, எண்ணெய் வணிகம், விவசாய பொருட்கள், சோலார் பவர் உற்பத்தி, விமான துறை.கட்டமைப்பு துறை என பல துறைகளில் வளர்ச்சி கண்டு வரும் அதானிக்கு, தற்போது கையில் லட்டு கிடைத்தால் போல் மின் சார கொள்முதல் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் விற்பனை 6172 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 6.12 சதவீதம் வீழ்ச்சி கண்டும், இதே கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 8.17 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் அதானி பவர் இனி வரும் காலாண்டுகளில் மீண்டும் எழுச்சியடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.