2020ஆம் ஆண்டில் கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும், கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பல துறையில் புதிய வர்த்தகத்தைத் துவங்கி, தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது நிதி நெருக்கடியால் வீழ்ந்த வீட்டு கடன் சேவை நிறுவனமான DHFL கைப்பற்றும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது அதானி குழுமம்.
இந்நிறுவனத்தைக் கைப்பற்ற ஏற்கனவே 33,000 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் குறிப்பிட்டு விண்ணப்பம் கொடுத்துள்ள அதானி குழுமம், தேவைப்பட்டால் இன்னும் கூடுதலான தொகைக்குக் கைப்பற்றவும் தயார் எனத் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம்
DHFL நிறுவனத்தின் பங்கு உரிமையாளர்கள், கடன் பெற்றவர்கள், டெபாசிட் செய்த அனைவருக்கும் அதிகப்படியான நன்மை ஏற்படவும், DHFL நிறுவனத்திற்கு அதிகப்படியான விலையைக் கொடுக்கவும் தயார் என அதானி குழுமம் DHFL அமைப்பை ஏலம் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் அமைப்பிற்கு ஈமெயில் அனுப்பியுள்ளது.
33,000 கோடி ரூபாய்
அதானி குழுமம் முதல் DHFL நிறுவனத்தின் wholesale மற்றும் Slum Rehabilitation Authority (SRA) வர்த்தகத்தை மட்டுமே கைப்பற்ற விண்ணப்பம் செய்த நிலையில், திடீரென மொத்த வர்த்தகத்தையும் கைப்பற்ற 30000 கோடி ரூபாய் மற்றும் 3,000 கோடி ரூபாய் வட்டி சேர்ந்து மொத்தம் 33,000 கோடி ரூபாய் தொகைக்கு மொத்த DHFL நிறுவனத்தைக் கைப்பற்ற விண்ணப்பம் செய்துள்ளது.
தற்போது இதைவிடவும் அதிகமாகத் தொகைக்குக் கைப்பற்றவும் அதானி குழுமம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
போட்டி நிறுவனங்கள்
DHFL நிறுவனத்தைக் கைப்பற்ற அதானி குழுமத்தோடு, பிராமல் குரூப், அமெரிக்காவின் சொத்து மேலாண்மை நிறுவனமான ஓக்ட்ரீ கேபிடல் மற்றும் எஸ்சி லோவி ஆகிய நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் விண்ணப்பம் செய்திருந்தது.
ஆனால் அதானி குழுமம் புதிய தொகையுடன் மொத்த வர்த்தகத்தையும் கைப்பற்ற விண்ணப்பம் செய்த போது பிற 3 நிறுவனங்களும் எதிர்ப்புத் தெரிவித்தது.
ஓக்ட்ரீ கேபிடல் மற்றும் பிராமல்
இதேபோல் ஓக்ட்ரீ கேபிடல் DHFL நிறுவனத்தை 28,300 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற விண்ணப்பம் செய்துள்ள நிலையில் 1000 கோடி ரூபாயை இன்சூரன்ஸ் க்ளைம்-க்காக ஒதுக்கப்பட்டும் எனவும் தெரிவித்துள்ளது.
பிராமல் குரூப் DHFL நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகத்தைச் சுமார் 23,500 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற விண்ணப்பம் செய்துள்ளது.
மறுபரிசீலனை
ஒரு நிறுவனம் திவாலாக அறிவிக்கப்பட்ட போது அதிகத் தொகை யார் கொடுக்கிறார்களோ அவருக்கே குறித்த சொத்து அல்லது நிறுவனம் கொடுக்கப்படும்.
அந்த வகையில் அதானி குழுமத்தின் புதிய தொகையை விடவும் அதிகமான தொகைக்குப் பிற 3 நிறுவனங்கள் கொடுக்க முடியாத பட்சத்தில் அதாவது மறுஆய்வு செய்து மீண்டும் விண்ணப்பிக்க முடியாத நிலையில் அதானிக்கு DHFL நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
திவால்
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் 3வது பெரிய வீட்டுக் கடன் சேவை நிறுவனமான DHFL நிறுவனத்தை ரிசர்வ் வங்கி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் திவாலாக அறிவிக்கப் பரிந்துரை செய்தது.
ஜூலை 2019-ன் படி DHFL நிறுவனம், வங்கிகளுக்கு, தேசிய வீட்டுவசதி வாரியம், மியூச்சவல் பண்ட் மற்றும் பத்திர முதலீட்டாளர்களுக்குச் சுமார் 83,873 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.